சென்னை: தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்களை போலீசார் கண்டறிந்து கைது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் பழைய பெருங்களத்தூர் அன்னை இந்திரா நகர் ஆறாவது தெருவில், சில நபர்கள் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாகத் தாம்பரம் மதுவிலக்கு அமலாக்கு பிரிவு தரிப்படைப்பு காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், போதை மாத்திரைகளை விற்பனை செய்து கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரணை செய்தனர். இருவரும் பழைய பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த சபரி வாசன் என்கிற புஜி (21), வினோத் என்கிற அலி வினோத் (33) என தெரியவந்தது.