சென்னை நொளம்பூர் வாவின் ரோடு மங்கலேரி பகுதியில் நேற்றிரவு மூன்று நபர்கள் மது அருந்தியுள்ளனர். அப்போது, போதை தலைக்கேறியதால் மூவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், இருவர் சேர்ந்து உடனிருந்த நபரை கல்லால் சரமாரியாக தாக்கிக் கொலை செய்துள்ளனர்.
பின்னர், இன்று அதிகாலை 3 மணியளவில் கொலை செய்த உடலை ஒரமாக வைத்து எரிக்கும்போது அங்கு வந்த டீ வியாபாரம் செய்யும் தர்மராஜ் என்பவர் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து உடனடியாக அவர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த நொளம்பூர் காவல் துறையினர் டீ வியாபாரம் செய்பவரிடம் விசாரணை செய்தனர்.
விசாரணையில் போதையிலிருந்த இருவரும் மண்ணூர்பேட்டை சாலை வழியாக சென்றதாக தெரிவித்தார். உடனே ரோந்து வாகனத்தில் சென்று இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர், இருவரையும் நொளம்பூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் அவர்கள் விஷ்ணு (33), பாஸ்கர் (44) எனத் தெரியவந்தது. இருவரும் நொளம்பூர் பகுதியில் குப்பை சேகரிப்பவர்கல் எனபதும் தெரியவந்தது.