தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 14, 2022, 1:35 PM IST

ETV Bharat / state

கொலை கும்பலிடம் இருந்து நண்பனை காப்பாற்றிய இருவர் உயிரிழப்பு

முன்விரோதம் காரணமாக கொலை கும்பலிடம் இருந்து நண்பனை காப்பாற்ற போராடிய இருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல் துறை விசாரணை
காவல் துறை விசாரணை

சென்னை:ஆவடி வசந்தம் நகர் சிவகுரு தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சுந்தர் (29). இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. ஆவடி, நேரு பஜார், மசூதி பின்புறத்தில் வசித்தவர் அசாருதீன் (30). இவர் மீன் கடை ஊழியர். இவரது மனைவி கவுசிக். இவர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். சுந்தர், அசாருதீன் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.

இவர்கள் இருவரும் வேலை நேரத்தை தவிர மற்ற இடங்களில் ஒன்றாக சென்று விட்டு வீடு திரும்புவார்கள். இதற்கிடையில், நேற்றிரவு (மார்ச் 13) சுந்தர், அசாருதீன் இருவரும் இரவு 10மணி வரை வீடு திரும்பவில்லை. இவர்களது செல்ஃபோனுக்கு உறவினர்கள் தொடர்பு கொண்டபோது அழைப்பை எடுக்கவில்லை. இதனையடுத்து சந்தேகமடைந்த உறவினர்கள் இவர்கள் இருவரையும் பல்வேறு இடங்களில் தேடினர்.

இந்நிலையில், ஆவடி உதவி ஆணையர் அலுவலகம் பின்புறம் உள்ள மத்திய அரசின் பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான ஓ.சி.எப் மைதானத்தில் சுந்தர், அசாருதீன் ஆகியோர் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக தகவல் கிடைத்தையடுத்து உறவினர்கள் அங்கு சென்றனர்.

போலீஸ் விசாரணை

இது குறித்து நள்ளிரவு 12 மணியளவில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பிறகு, சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி துணை கமிஷனர் மகேஷ், உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி, ஆய்வாளர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன் உள்ளிட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே இறந்தவர்களின் உடலை மீட்ட போலீசார் உடற்கூராய்வுக்காக கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படையில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வந்தனர். ஆவடி, கொள்ளுமேட்டைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் (32). இவரது மனைவி பிரசில்லா. 2018ஆம் ஆண்டு மணிகண்டன் ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது வேப்பம்பட்டை சார்ந்த ஜெகன் (30) என்ற ஆட்டோ ஓட்டுநர், மணிகண்டனை ஜாமீனில் எடுக்க உதவி செய்துள்ளார்.

இதன் பிறகு, அவரது மனைவி பிரிசில்லாவுடன் ஜெகனுக்கு திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜெகன், பிரிசில்லாவை அழைத்து கொண்டு சென்று விட்டார். இதன்பிறகு, மணிகண்டன் பலமுறை குடும்பம் நடத்த அழைத்துள்ளார். ஆனால், அவர் வர மறுத்து ஜெகனுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதன்பிறகு மணிகண்டன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெகன், மணிகண்டனை ஆட்டோவில் கடத்திச் சென்று நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். மேலும், வீடியோவை வெளியிடாமல் இருக்க ஒரு லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் எனக் கூறியுள்ளார். அப்போது ஜெகனிடம் இருந்து தப்பிக்க மணிகண்டன் 10 நாள்களில் பணம் ஏற்பாடு செய்து தருவதாக கூறியிருக்கிறார்.

கொலை செய்ய திட்டம்

இதன் பிறகு, மணிகண்டனை ஜெகன் விடுவித்துள்ளார். தனது மனைவியை அபகரித்ததோடு மட்டுமல்லாமல், தன்னை நிர்வாணப்படுத்தி பணம் கேட்டு மிரட்டியதால், ஜெகனை தீர்த்துக்கட்ட மணிகண்டன் முடிவு செய்துள்ளார். இதற்காக, அவர் கூலிப்படையை ஏற்பாடு செய்துள்ளார். இதன்பிறகு, நேற்று மணிகண்டன், நான் பணம் ஏற்பாடு செய்துவிட்டேன், உன்னிடம் கொடுக்க வேண்டும் என ஜெகனிடம் கூறியுள்ளார்.

இதனை நம்பிய ஜெகனும் ஆவடி, ஓ.சி.எப் மைதானத்திற்கு பணத்துடன் வருமாறு கூறியுள்ளார். இதனையடுத்து நேற்று இரவு மணிகண்டன் அங்கு வந்துள்ளார். அப்போது அங்கு ஜெகன் தனது நண்பர்களான சுந்தர், அசாருதீன், யாசின் வந்துள்ளார். பின்னர், அனைவரும் அங்கு மது அருந்தியுள்ளனர். அப்போது, மணிகண்டன் ஏற்பாடு செய்த கூலிப்படையினர் 4 பேர்கள் திடீரென அங்கு வந்து ஜெகனை கொல்ல முயன்றனர்.

கொலை கும்பல் கைது

அப்போது, அங்கிருந்த சுந்தர், அசாருதீன் ஆகியோர் கூலிபடையினரை தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சுந்தர், அசாருதீன் ஆகிய இருவரை கூலிப்படையினர் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதற்கிடையில், ஜெகன், யாசின் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். பின்னர், அங்கிருந்து மணிகண்டன் தலைமையில் கூலிப்படையினர் தப்பி சென்றனர் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, இன்று (மார்ச் 14) காலை தனிப்படை போலீசார் மணிகண்டன் உள்ளிட்ட கூலிப்படையினரை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது, ஆவடி அடுத்த வெள்ளானூர், கிருஷ்ணா கால்வாய் பகுதியில் மணிகண்டன் உள்பட நண்பர்கள் மது அருந்தி கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடிக்க சென்றபோது மணிகண்டன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

காவல் துறை விசாரணை

மேலும், நண்பர்களான 4 பேரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர், போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கும் இரட்டை கொலைக்கும் தொடர்புள்ளதா என தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் மணிகண்டன் மற்றும் கூலிப்படையினரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:‘புஷ்பா’ படத்தை பார்த்து மதுபானம் கடத்தல் - போலீஸ் தீவிர விசாரணை

ABOUT THE AUTHOR

...view details