தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புழல் சிறையிலிருந்து பெண் கைதி தப்பி ஓடியதால் இரண்டு பெண் வார்டன்கள் சஸ்பெண்ட்..! - குண்டர் தடுப்பு சட்டம்

Female prisoner escaped from puzhal jail: சென்னை புழல் சிறையிலிருந்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டு இருந்த பெண் கைதி தப்பியோடியதால் இரண்டு பெண் வார்டன்களை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

புழல் சிறையில் இருந்து பெண் கைதி தப்பி ஓடியதால் இரண்டு பெண் வார்டன்கள் சஸ்பெண்ட்
புழல் சிறையில் இருந்து பெண் கைதி தப்பி ஓடியதால் இரண்டு பெண் வார்டன்கள் சஸ்பெண்ட்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 14, 2023, 4:32 PM IST

சென்னை: கர்நாடகா மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் ஜெயந்தி(32). இவர் சென்னை செம்மஞ்சேரியில் வசித்து வந்தார். இந்நிலையில், இவர் மீது செம்மஞ்சேரி, சூளைமேடு, அரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி சூளைமேடு காவல் நிலைய காவல்துறையால் திருட்டு வழக்கு ஒன்றில் ஜெயந்தி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். பின்னர், காவல் ஆணையர் உத்தரவின் பேரில் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், புழல் சிறையில் சிறை கைதிகளுக்கு வழங்கும் வழக்கமான பணிகளுக்குப் பிறகு கைதிகள் பதிவேட்டைச் சரிபார்த்த போது, ஜெயந்தி மாயமாகி இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, சிறை முழுவதும் அவரைத் தேடியும் ஜெயந்தி காணவில்லை. இதனையடுத்து ஜெயந்தி சிறையிலிருந்து தப்பிச் சென்று இருப்பதைக் காவலர்கள் உறுதி செய்துள்ளனர்.

இதையடுத்து, சிறையிலிருந்த சிசிடிவி காட்சிகளைக் காவலர்கள் ஆய்வு செய்த போது பார்வையாளர்கள் அறையைச் சுத்தம் செய்து கொண்டிருந்த ஜெயந்தி அதன் அருகே இருந்த நுழைவு வாயில் வழியாக வெளியே தப்பி ஓடியது தெரியவந்தது. இந்த நிலையில், ஜெயந்தி தப்பி ஓடிய போது பணியில் கவனக்குறைவாக இருந்த இரண்டு பெண் வார்டன்களை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பெண் வார்டன்கள் கனக லட்சுமி மற்றும் கோகிலா ஆகிய இரண்டு பெண் வார்டன்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், திருட்டு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயந்தி தப்பி ஓடியது குறித்து சிறைத்துறை காவலர்கள் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மேலும், அனைத்து காவல் நிலையங்களுக்கும் ஜெயந்தியின் புகைப்படத்தை அனுப்பி அவரை கண்டறிந்தால் தகவல் தெரிவிக்கும்படி தெரிவித்துள்ளனர். புழல் சிறையில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டு இருந்த பெண் கைதி தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:பள்ளி மாணவனை திருநங்கையாக மாற்ற முயற்சி.. காவல் ஆணையர் அலுவலகத்தில் பெற்றோர் புகார்!

ABOUT THE AUTHOR

...view details