தமிழ்நாடு

tamil nadu

துளசி அய்யா வாண்டையார் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!

துளசி அய்யா வாண்டையார் மறைவிற்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.

By

Published : May 17, 2021, 5:06 PM IST

Published : May 17, 2021, 5:06 PM IST

துளசி அய்யா வாண்டையார் மறைவு
துளசி அய்யா வாண்டையார் மறைவு

துளசி அய்யா வாண்டையார் மறைவிற்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது, "தஞ்சை மாவட்டத்தின் பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான துளசி அய்யா வாண்டையார் அவர்கள் இன்று மரணமடைந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன்.

தஞ்சையில் 'பூண்டி' என்ற இடத்தில், தனது கல்லூரி மூலம் பல ஏழை மாணவர்களுக்கு கல்வி ஞானத்தை அளித்து, அவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றியவர், துளசி அய்யா வாண்டையார். தனது கல்லூரியின் மூலமாக பல மாணவர்களுக்கு கல்வி அளித்த காரணத்தினாலேயே இவர் 'கல்விக் காவலர்' எனப் போற்றப்பட்டார். காந்தியக் கொள்கைகளில் உறுதியாக இருந்ததால் தனது கடைசி மூச்சு வரை கதர் ஆடையை மட்டுமே உடுத்தி வந்தவர், துளசி அய்யா வாண்டையார்.

காங்கிரஸ் கட்சியின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் பொழுது, அவர் ஒரு நாள் கூட நாடாளுமன்றத்திற்கு விடுப்பு எடுக்காமல், அனைத்துக் கூட்டத்திலும் கலந்து கொண்டவராகவும், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலகத்தில் அதிகமான நேரத்தை செலவு செய்த நாடாளுமன்ற உறுப்பினராகவும் திகழ்ந்தவர்.

துளசி அய்யா வாண்டையார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கல்வி வள்ளல் கே. துளசி வாண்டையார் மறைவு வருத்தமளிக்கிறது: டிடிவி தினகரன்

ABOUT THE AUTHOR

...view details