தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோடு இடைத்தேர்தலில் பின்வாங்கிய அமமுக.. டிடிவி தினகரன் கூறிய காரணம் என்ன? - erode east by poll

ஈரோடு இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 7, 2023, 5:15 PM IST

சென்னை: ஈரோடு இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்குக் குக்கர் சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்படாத காரணத்தினால், இடைத்தேர்தலில் கழகம் போட்டியில்லை. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் அறிவிக்கப்பட்டு, களத்தில் பரப்புரை பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தச் சூழலில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்குக் கடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் ஒதுக்கப்பட்ட பிரஷர் குக்கர் சின்னத்தை, இடைத்தேர்தல் காலங்களில் ஒதுக்கிட இயலாது என தலைமைத் தேர்தல் ஆணையம் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாகக் கழகத்தின் சார்பில் 27.01.2023 மற்றும் 31.01.2023 ஆகிய தேதிகளில் அளிக்கப்பட்ட கோரிக்கைகளுக்குத் தலைமை தேர்தல் ஆணையம் இன்று பதிலளித்துள்ளது. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்குப் பொதுத்தேர்தல் காலங்களில் குக்கர் சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையம், தற்போது இடைத்தேர்தல் காலங்களில் அவ்வாறு ஒதுக்கீடு செய்ய இயலாது என தெரிவித்துள்ளது.

பாராளுமன்றப் பொதுத்தேர்தல் ஓராண்டு காலத்திற்குள் வரவிருக்கும் சூழலில், புதியதோர் சின்னத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். ஆகவே, வரவிருக்கிற பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றப் பொதுத்தேர்தல்களில் நமது வெற்றிச்சின்னமான குக்கர் சின்னத்தோடு தேர்தல்களைச் சந்திப்போம்.

இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்ப்பதே சரியாக இருக்கும் என்ற தலைமைக் கழக நிர்வாகிகளின் ஆலோசனையைக் கருத்தில்கொண்டு, நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

அமமுக சார்பில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சிவபிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், டிடிவி தினகரன் திடீரென இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details