தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 4, 2021, 8:26 PM IST

ETV Bharat / state

அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த டிராபிக் ராமசாமி!

பிளக்ஸ் பேனர் கலாசாரத்துக்கு எதிரான இவரது தொடர் போராட்டம் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் கட்-அவுட் பேனர் கலாசாரம் ஒழிக்கப்பட்டது. இவரின் பல பொது நல வழக்குகள், தமிழ்நாட்டு வரலாற்றில் திருப்புமுனையாக மாறின என்பதை மறுப்பதற்கு இல்லை.

Traffic Ramaswamy
டிராபிக் ராமசாமி

போக்குவரத்தின் காவலன்

சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது, களத்தில் இறங்கி முதல் நபராகப் போராடுபவர் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி. ஆரம்பக் காலத்தில் ராமசாமி தானே முன்வந்து சென்னை, பாரிமுனையின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் காவல் துறைக்கு உதவி செய்தார். இதையடுத்து போக்குவரத்துக் காவல்துறை இவருக்கு ஓர் அடையாள அட்டையை வழங்கியது.

அன்று முதல் டிராஃபிக் ராமசாமி என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். 87 வயதான இவர் பல்வேறு சமூக பிரச்னைகளுக்காக சென்னை உயர் நீதிமன்றம் உள்பட பல்வேறு நீதிமன்றங்களில் ஏராளமான பொது நல வழக்குகளைத் தாக்கல் செய்து வெற்றி பெற்றார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் ஏப்ரல் 1, 1934 அன்று பிறந்தவர் டிராபிக் ராமசாமி.

பேனர் கலாச்சாரத்துக்கு எதிராக குரல்

பிரிட்டிஷ் இன்ஸ்ட்டிட்யூட், மும்பை கல்வி நிறுவனத்தில் அஞ்சல்வழி மூலம் துணித்துறையில் தொழில்பயிற்சி பெற்றார். ஊர்க்காவல் படையிலும் டிராபிக் ராமசாமி பணியாற்றியுள்ளார்.

நீதிமன்றத்தில் போராட்டம்

பல முக்கிய பிரச்னைகளுக்கு நீதிமன்றத்தை நாடி தீர்வு கொண்டு வந்துள்ளார். முக்கியமாக, போக்குவரத்துக்கு இடையூறாகவும், பல்வேறு விபத்துகளுக்கு காரணமாகவும் இருந்த இன்ஜின் பொருத்தப்பட்ட மீன்பாடி வண்டிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதன் காரணமாக முகத்தில் கத்திக்குத்தும் வாங்கினார் டிராபிக் ராமசாமி.

டிராபிக் ராமசாமி

பேனர்களுக்கு எதிராகப் போராட்டம்

பிளக்ஸ் பேனர் கலாசாரத்துக்கு எதிரான அவரது தொடர் போராட்டம் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் கட்-அவுட் பேனர் கலாசாரம் ஒழிக்கப்பட்டது. இவரின் பல பொது நல வழக்குகள், தமிழ்நாட்டு வரலாற்றில் திருப்புமுனையாக மாறின.

தகவலறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்

ஆர்டிஐ, அதாவது தகவல் அறியும் உரிமைச் சட்டம் வருவதற்கு முன்பு இருந்தே பல்வேறு தகவல்கள் மக்களைச் சென்று சேர வேண்டும் என்று போராடி வந்தார் டிராபிக் ராமசாமி. கல்லூரிப் படிப்பைக் கூட எட்டாத இவர், தான் தொடர்ந்த பல்வேறு வழக்குகளில் தானே முன்னின்று வாதாடியுள்ளார்.

திரைப்படமாகிய வாழ்க்கைப் போராட்டம்

திரைப்படமாகிய வாழ்க்கைப் போராட்டம்

சமூகத்தின் மீதான இவரின் அக்கறையை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், இவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு வாழ்க்கை வரலாற்றுபடம் ஒன்றும் பிரபல இயக்குநர் எஸ்ஏசியின் நடிப்பில் உருவாக்கப்பட்டது.

ஜெயலலிதாவுக்கு எதிராகக் களம் கண்ட ராமசாமி

கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில், தென் சென்னை மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார். தொடர்ந்து, 2015ஆம் ஆண்டு எம்எல்ஏ பதவியை ஜெயலலிதா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நடைபெற்ற ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

போக்குவரத்தின் காவலன்

அதுமட்டுமின்றி, 2015இல் சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஜெயலலிதாவுக்கு எதிராகக் களம் கண்டார் டிராபிக் ராமசாமி. இவரின் பொதுநல வழக்குகளால் கோபம் கொண்ட பலரும், இவரை மறைமுகமாகத் தாக்கியதும் உண்டு.

வழக்குகளின் நாயகன்

இத்தகைய பல்வேறு எதிர்ப்புகளிலும், தனது பொது நலப் பணியைக் கைவிடாமல் தொடர்ந்து செயல்பட்டார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து பல வழக்குகள் தொடர்ந்ததால் அதிமுகவினரின் கோபத்தை சம்பாதித்தார். குறிப்பாக, ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகங்களை எழுப்பி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றையும் தொடர்ந்திருந்தார்.

87 வயதிலும் ஒயாத டிராபிக் ராமசாமி போராட்டம்

ஓயாத போராட்டம்

கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த இவர், வீட்டிலிருந்த சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஐசியூவில் சிகிச்சை பெற்றும் வரும் டிராபிக் ராமசாமியின் உடல்நிலை, கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியது. இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டிராபிக் ராமசாமி, இரவு 7.45 மணிக்கு காலமானார்.

அநீதியைக் கண்ட போதெல்லாம் எதிர்த்துப் போராடி அதில் பெருமளவு வெற்றியும் கண்ட டிராபிக் ராமசாமியின் மறைவு சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details