சென்னை:மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (நவ.16) காலை 5.30 மணி அளவில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும், 18ஆம் தேதி அதிகாலை வங்கதேச கடற்கரையைக் கடக்க உள்ளதாகத் தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (நவ.16) காலை 5.30 மணி அளவில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, காலை 8.30 மணி அளவில் விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 390 கி.மீ கிழக்கு - தென்கிழக்கே, பரதீப்பிலிருந்து (ஒரிசா) சுமார் 320 கி.மீ தென் - தென்கிழக்கே, டிகாவிலிருந்து (மேற்கு வங்கம்) சுமார் 460 கி.மீ தென் - தென்மேற்கே, கேப்புபாராவிலிருந்து (வங்கதேசம்) சுமார் 610 கிலோ மீட்டர் தென் - தென்மேற்கே நிலை கொண்டுள்ளது.
இது வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று, 18ஆம் தேதி அதிகாலை வங்கதேச கடற்கரையை மோங்க்லா - கேப்புபாராவிற்கு இடையே கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிகை:
தமிழக கடலோரப் பகுதிகள்: இன்று (நவ.16) தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.