ஒரு மனிதன் சகமனிதனால் புறக்கணிக்கப்படும் பொழுது, அடித்து ஒடுக்கப்படும் பொழுது, பல சூழ்நிலைகளால் அழுத்தப்படும் பொழுது, அவன் உள்ளிருக்கும் திறன் வெடித்துச் சிதறுகிறது. அப்போது 'புரட்சி' என்ற சொல் உதயமாகிறது.
இவ்வாறு அடித்தட்டு மக்கள் வெகுண்டெழுந்து ஆட்சி அதிகாரத்தின் சிம்மாசனங்களை அலங்கரித்த எத்தனையோ புரட்சிகளை இந்த உலகம் கண்டிருக்கிறது. எத்தனையோ புரட்சியாளர்களின் பெயர்களை உலக வரலாறு பதிவு செய்தும் இருக்கிறது. இந்த வரலாறுகளுக்கு நடுவே என்றும் ஓங்கி ஒலிக்கும் ஒரு பெயர் 'சே'!
இவர் அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோஷலிசப் புரட்சியாளர். இவரது இயற்பெயர் எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா என்றாலும் கூட மக்கள் இவரை சே குவேரா என்றே அழைத்தனர். 'சே' என்ற அர்ஜென்டினச் சொல்லுக்கு தோழன் என்று பொருள். அர்ஜென்டினாவில் பிறந்த சே குவேராவை கியூபா, மெக்ஸிக்கோ, பொலிவியா என பிற நாட்டவர்களும் தோழனாக ஏற்றுக்கொள்ள காரணம், ‘ஒரு மரம் வெட்டப்பட்டால் நிழல் போய்விடுமே என்று சாதாரண மனிதன் சிந்தித்துக் கொண்டிருக்கையில், காலையில் உணவைத் தேடி வெளியே சென்ற அதில் வசிக்கும் பறவைகள் மாலையில் எங்கு அமரும்’ என்ற ‘சே’வின் சிந்தனையே அவரை உலக மக்களின் தோழனாக அடையாளப்படுத்தியது.
'சமூகத்தின் அவநிலை கண்டு பொங்கி எழுவாயானால் நீயும் என் தோழனே' என உலக மக்களை அரவணைத்துக் கொண்டு எங்கெல்லாம் அடக்கப்பட்டவர்களின் இதயத் துடிப்பு கேட்கிறதோ அங்கெல்லாம் என் கால் பயணிக்கும் என கூறி சே குவேராவும் தன் பயணத்தைத் தொடங்கினார்.
இந்த எண்ணம் அவர் மனதில் உதித்தெழ காரணமாக இருந்தது தென் அமெரிக்காவைச் சுற்றி அவர் செய்த மோட்டர் சைக்கிள் பயணம்தான். மருத்துவம் படித்து முடித்துவிட்டு தன்னுடைய நண்பனான அல்பர்ட்டோவுடன் அவர் மேற்கொண்ட பயணமே ஏழ்மையின் பிடியில் சிக்கி பசியில் தவித்துக்கொண்டிருந்த மக்களை அவர் காண்பதற்கு அடித்தளமாக அமைந்தது.
அதிகார வர்க்கத்தால் அடித்தட்டு மக்கள் அடையும் அவல நிலைகளையும், உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த தொழுநோயாளிகள் மரணம் குறித்த கவலையின்றி மகிழ்சியாக கால்பந்து விளையாடுவதையும் கண்டார். அந்தத் தொழு நோயாளிகளுக்கு மருத்துவம் செய்துவிட்டு, தினமும் அவர்களோடு இணைந்து கால்பந்து விளையாட ஆரம்பித்தார். அப்படி விளையாடிக் கொண்டிருக்கையில் சே குவேரா மனதில் ஒரு இனம் புரியாத உணர்வு ஏற்பட்டது.
அந்த உணர்வு மதுவுக்குள் மூழ்கிக் கிடந்தபோது அவருக்கு கிடைக்கவில்லை. தன் காதலியோடு பேசித்திரிந்து பொழுதைக் கழித்தபோதும், உல்லாசத்தின் உச்சநிலையை அடைந்தபோதும் கூட அவருக்கு அந்த உணர்வு ஏற்படவில்லையாம். இந்த உணர்வுக்கு என்ன காரணம் என்று சேகுவேரா எண்ணிக்கொண்டிருக்கையில் ஒடுக்கப்பட்டு தளர்வுற்று மனதில் வேதனைத் ததும்ப துடித்துக்கொண்டிருக்கும் அடித்தட்டு மக்களின் சிரிப்புதான் காரணம் என்று உணர்ந்து கொண்டார்.
இதற்கிடையில் சேகுவேரா - அல்பர்ட்டோவின்தென் அமெரிக்கப் பயணம் வெனிசுலாவில் நிறைவடைந்தது. அங்கிருந்து நோயாளிகளுக்கு மருத்துவம் செய்ய வேண்டும் என்ற ஒற்றை நோக்கோடு புறப்பட்ட அவரின் எண்ணமும் பாதையும் வேறாக இருந்தது. அங்குள்ள மக்களின் நிலைகண்டு மருந்துப் பெட்டியை புறக்கணித்துவிட்டு குண்டு பெட்டிகளையும், துப்பாக்கிகளையும் எடுக்கும் எண்ணம் சேகுவேராவுக்கு வந்தது.