தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிதியமைச்சர் அறிவித்த திட்டங்களினால் விவசாயிகளுக்கு பயனில்லை: கே. எஸ். அழகிரி - alagiri congress

சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த கவர்ச்சி திட்டங்களினால் வாழ்வாதாரத்திற்காக நாள்தோறும் போராடுகிற விவசாயிகளுக்கு உடனடியாக எந்த பயனும் ஏற்படப்போவதில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

alagiri
alagiri

By

Published : May 17, 2020, 1:26 AM IST

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “விவசாயிகளின் வங்கி கடன் ரூ. 18 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிற நிலையில், கடனை தள்ளுபடி செய்வதற்கான எந்த அறிவிப்பும் இல்லாதது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் கார்பரேட் நிறுவனங்களுக்கு ரூ. 8 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்த நரேந்திர மோடி அரசு, விவசாயிகளின் கடனை ரத்து செய்ய மறுப்பது ஏன்? கார்பரேட்டுகளுக்கு பரிவு காட்டுகிற மோடி விவசாயிகளை வஞ்சிப்பது நியாயமா?

நிதியமைச்சரின் நிவாரண அறிவிப்பு மீண்டும் படஜெட் உரையை படித்ததாகவே தோன்றுகிறது. உடனடி பலனை தராத அறிவிப்புகள் விவசாயிகளுக்கு மிகுந்த ஏமாற்றமே. கரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக கடந்த 50 நாட்களாக நடைமுறையில் இருக்கும் பொதுமுடக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 20 லட்சம் கோடியில் சிறப்பு பொருளாதார திட்டத்தை மோடி அறிவித்தார். அதை நடைமுறைக்கு கொண்டுவருவதற்காக மூன்றாம் கட்டமாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 11 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதில் 8 அறிவிப்புகள் விவசாயம் சார்ந்ததாக கூறியிருக்கிறார்.

நிதியமைச்சரின் பெரும்பாலான நிதி ஒதுக்கீடுகள் விவசாயிகளின் உள்கட்டமைப்பை உருவாக்குவதாக இருக்கிறது. கொள்முதல் நிலையங்கள், குளிர்பதன கிடங்குகள் போன்றவற்றை கட்டமைக்க நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதே போல மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு போன்றவற்றிற்கு சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே விவசாயிகளுக்கு உடனடி பலன்களை தரக்கூடிய வகையில் இல்லை. இவை நீண்டகால திட்டங்களாகும்.

பொது முடக்கத்தின் காரணமாக தங்களது வாழ்நாளில் விவசாயிகள் இதுவரை காணாத பல்வேறு துன்பங்களுக்கு தீர்வு காணுகிற வகையில் எந்த திட்டமும் நிதியமைச்சரின் அறிவிப்பில் இல்லை. குறிப்பாக விவசாயிகளின் விளைபொருளுக்கு விவசாயிகளே விலையை நிர்ணயம் செய்கிற வகையில் மத்திய சட்டம் கொண்டுவரப்படும் என்கிறார். விவசாயிகள் விதைக்கும் முன்பே எவ்வளவு விலை கிடைக்கும் என்கிற உறுதியை வழங்குவதற்கு வழி செய்யப்படும் என்றும் கூறியிருக்கிறார். இதை அமல்படுத்துவதற்கு எத்தகைய மந்திரத்தை கையாளப்போகிறாரோ தெரியவில்லை. பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

மருத்துவ மூலிகை பயிர் செய்வது, தேனீ வளர்ப்பு, தேன் உற்பத்தி, பயிர் காப்பீடு திட்டம் போன்றவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார். எந்த நேரத்தில் எதை செய்யவேண்டும் என்கிற குறைந்தபட்ச புரிதல்கூட இல்லாமல் நிதியமைச்சரின் அறிவிப்புகள் இருக்கிறது. வாழ்வாதாரத்திற்காக நாள்தோறும் போராடிக்கொண்டிருக்கிற விவசாயிகளுக்கு நிதியமைச்சரின் கவர்ச்சி திட்டங்களினால் உடனடியாக எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. இந்த அறிவிப்புகள் வெறும் கண்துடைப்புகளாகவே கருதப்படும்.

எனவே ஒரு பக்கம் கொரோனா நோயோடு போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்த உடனடி நிவாரணங்கள் எதுவுமே நிதியமைச்சரின் அறிவிப்பில் இல்லாதது மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. நிதியமைச்சரின் அறிவிப்பை பார்க்கிறபோது இது நிவாரண அறிவிப்பா? நிதியமைச்சரின் படஜெட் உரையா என்று நினைக்க தோன்றுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details