தமிழ்நாடு

tamil nadu

தென் மாவட்டங்களில் ஜனவரி 2ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வு - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 26, 2023, 9:28 PM IST

TN South half yearly exam date: தென் மாவட்டங்களில் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் வரும் ஜனவரி 2ம் தேதி முதல் தொடங்கி நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்

தென் மாவட்டங்களில் ஜனவரி 2 முதல் அரையாண்டு தேர்வு நடைபெறும்
தென் மாவட்டங்களில் ஜனவரி 2 முதல் அரையாண்டு தேர்வு நடைபெறும்


சென்னை: எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான குளிர்கால சிறப்புப் பயிற்சி முகாம் 2023ஐ பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (டிச.26) தொடங்கி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், தென் மாவட்டங்களில் மட்டுமின்றி சென்னையிலும் மழையால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் சான்றிதழ்கள் வழங்க ஆன்லைன் மூலமும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், மழையால் நனைந்த புத்தகங்கள் மட்டுமில்லாமல் சீருடைகளையும் வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் சொன்னதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

மேலும் பேசிய அவர், “தென் மாவட்டங்களில் உள்ள பள்ளியில் அரையாண்டு தேர்வில் 4 தேர்வுகள் நடத்த முடியாமல் போனது. அந்த தேர்வுகள் ஜனவரி 2ல் பள்ளி தொடங்கும் போது தேர்வு நடத்தத் திட்டமிட்டு உள்ளது. திருநெல்வேலியில் ராதாபுரம், நெல்லை டவுன், நாங்குநேரியில் சில இடங்களில் தண்ணீர் வடிந்தாலும் தூத்துக்குடியில் தண்ணீர் வடியவில்லை.

அதனால், 4 ஜே.டிக்கள் நியமிக்கப்பட்டு அவர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. திருநெல்வேலியில் 10 பள்ளிகள் நிறையச் சேதம் அடைந்துள்ளது. தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டத்தில் சேதம் அடைந்த பள்ளிகளைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பாகவே உரியப் பாதுகாப்பு இருக்கும் பட்சத்தில் மட்டுமே அது அன்றைக்குத் திறக்கப்படும். கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தேர்வை எழுத முடியாது; தள்ளி வைக்க வேண்டும் என பெரிய அளவிற்குக் கோரிக்கை வரவில்லை. எனினும், ஜனவரி 7 ல் நடக்க உள்ள பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வைத் தள்ளி வைப்பது குறித்து, முதல்வரின் ஆலோசனை கேட்கப்படும்.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் சாதிய தீண்டாமை இருக்கிறது என்பது தொடர்பான சர்வே வெளியிட்டு இருக்கிறார்கள். அது தொடர்பாக ஆய்வு செய்வோம். அது போன்ற தீண்டாமை தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் இல்லை. இரண்டு லட்சம் பேர் பங்கேற்ற முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வு கணினி வழியில் நடத்திய ஆசிரியர் தேர்வு வாரியம், 41,000 பேர் விண்ணப்பித்துள்ள பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு பழைய முறையில் நடத்துவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரிடம் விளக்கம் கேட்கப்படும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:கிராமப்புறங்களில் 500 சிசிடிவி: சூலூர் காவல் நிலையத்தில் சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறை துவக்கி வைப்பு..!

ABOUT THE AUTHOR

...view details