தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"மாநில அளவிலான முன்னுரிமையில் நிர்ணயம்" - தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் தொடக்கக் கல்வித்துறை இயக்குநருக்குக் கடிதம்..!

தொடக்கக் கல்வித்துறையில் அனைத்து நியமனங்களும் மாநில அளவில் நடைபெறுவதால் அனைத்து ஆசிரியர்களுக்கும் மாநில அளவிலான முன்னுரிமை நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் தொடக்கக் கல்வி இயக்குநருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 24, 2023, 4:03 PM IST

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் தொடக்கக் கல்வித்துறை இயக்குனருக்கு கடிதம்
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் தொடக்கக் கல்வித்துறை இயக்குனருக்கு கடிதம்

சென்னை:தொடக்கக் கல்வித்துறையில் தற்போது அனைத்து நியமனங்களும் மாநில அளவில் நடைபெறுவதால், அனைவருக்கும் மாநில முன்னுரிமை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு அவர்கள் பதவி உயர்வு பெற்ற தேதியை அடிப்படையாகக் கொண்டு மாநில அளவில் முன்னுரிமை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரான பேட்ரிக் ரெய்மாண்ட் தொடக்கக் கல்வி இயக்குநருக்குக் கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பியுள்ளார்.

தொடக்கக்கல்வித்துறையில் சார்நிலைப் பணிகளின் சிறப்பு விதிகளில் ஒன்பதாம் விதிகளில், ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியமும் ஒர் அலகு என உள்ளதனை மாவட்ட முன்னுரிமை அல்லது மாநில முன்னுரிமை என மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்து உரிய பரிந்துரையினை அரசுக்கு அளிப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநரைத் தலைவராகவும், உறுப்பினர்களாக தொடக்கக்கல்வித்துறை இயக்குநர், பள்ளிக்கல்வித்துறை பணியாளர் தொகுதி இணை இயக்குநர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் தொடக்கக் கல்வி இயக்குநருக்கு அளித்துள்ள மனுவில், "தமிழ்நாடு தொடக்க கல்வி சார்நிலைப் பணி விதிகள் 1983ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது (அரசாணை எண் 1383 நாள் 23.08.1988). இவ்விதிகள் அன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட்டது.

விதிகள் உருவாக்கப்பட்டு 40 ஆண்டுகள் கடந்ததால் இந்த விதிகள் இந்த காலத்திற்கு எவ்வகையிலும் பொருந்தவில்லை. இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடு பதவி உயர்வு இடமாறுதல் போன்றவற்றில் இந்த அரசாணைகளைப் பின்பற்றுவதால் ஆயிரக்கணக்கான நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் இளையோர் ,முதியோர் ஊதிய முரண்பாடு தொடர்பாகத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருவதால் ஊதிய நிர்ணயித்தினால் அரசுக்கு பெறும் நிதி இழப்பு ஏற்பட்டு வருகிறது.

இரண்டாவது ஊதியக் குழு 1970 அக்டோபர் 2ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த ஊதியக்குழுவில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கென்று தனி ஊதிய விகிதம் அமல்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து பல்வேறு நீதிமன்ற வழக்குகள் தொடரப்பட்டன. அதன் அடிப்படையில் 1979ஆம் ஆண்டு முதல் தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களின் முன்னுரிமைகள் நிர்ணயம் செய்யப்படும் பணிகள் துவங்கின.

தொடக்க நடுநிலைப்பள்ளிகள் 31.05.1961 வரை ஊராட்சி ஒன்றிய ஆணையரின் கட்டுப்பாட்டில் இருத்தன. ஊராட்சி ஒன்றிய ஆணையர்களே நியமன அலுவலர்களாகச் செயல்பட்டு வந்தனர். ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆணையர் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் மக்கள் பிரதிநிதி ஆகியோர் உள்ளடக்கிய குழு ஒவ்வொரு ஒன்றியங்களிலும் ஆசிரியர்களை நியமனம் செய்து வந்தனர். மாநில அளவிலான போட்டித் தேர்வுகளோ பணி நியமன முறையோ அப்போது பின்பற்றப்படவில்லை.

1981 இல் ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்கள் அனைவரும் அரசுப் பணியாளர்களாக மாற்றம் என்ற பெரும் கொள்கை முடிவை அரசு எடுத்தது. அதன்படி ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் அரசுப் பணியாளர்களாயினர் . எனினும் தொடக்கப்பள்ளிக் கட்டடங்களின் கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பொறுப்பானது ஊராட்சி ஒன்றியத்திடமே தங்கிவிட்டது. ஊராட்சி ஒன்றிய நிலையில் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர் ஒருவர் அமர்த்தப்பட்டு, அவரிடம் அவருடைய அதிகார எல்லைக்குட்பட்ட தொடக்கக் கல்விப் பள்ளிகளைப் பராமரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

மேற்பார்வை ஆய்வு மற்றும் கண்காணிப்புக்கென 1994 ம் ஆண்டு டிசம்பர் மாதம் மாவட்ட நிலையில் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். தொடக்கக் கல்விக்கென கொள்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்ட முறைப்படுத்தல் மற்றும் செயற்படுத்தலுக்காக 1986இல் தொடக்கக் கல்வி இயக்ககம் ஒன்று உருவாக்கப்பட்டது.

1981 ஆம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய ஆணையர்களால் நியமிக்கப்பட்ட ஆசிரியர் யாரும் தற்போது பணியில் இல்லை. இந்த நடைமுறை முற்றிலும் காலப்போக்கில் மாற்றப்பட்டு, இடைநிலை ஆசிரியர்கள் முதலில் மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு முன்னுரிமை அடிப்படையிலும் பிறகு மாநில அளவிலான முன்னுரிமை அடிப்படையிலும் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நியமனம் செய்யப்படும் முறை ஏற்பட்டது.

1995 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாகப் போட்டி தேர்வுகள் மூலம் தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறையில் ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள். காலப்போக்கில் இந்த நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு 2004ஆம் ஆண்டிலும் போட்டி தேர்வு மூலம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தொடக்கக்கல்வித்துறையில் நியமனம் செய்யப்பட்டனர். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஆசிரியர் நியமனத்திற்கு மாநில அளவிலான ஆசிரியர் தகுதித் தேர்வு நடைமுறைப் படுத்தப்பட்டு அதன் மூலமாகவே பணி நியமனங்கள் நடைபெற்று வருகின்றன.

தற்போது தொடக்கக் கல்வித் துறையில் எந்த நிலையிலும், ஊராட்சி ஒன்றிய அளவில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறுவது இல்லை. தற்போதைய நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்று உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் வலியுறுத்தியதன் அடிப்படையில் தொடக்கக் கல்வியில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் அனைத்தும் மாநில அளவிலான போட்டித் தேர்வு அடிப்படையில் தான் நடைபெறுகிறது.

இந்த நிலையில் தொடக்கக் கல்வித் துறையில் 1981ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ஒன்றிய அளவிலான முன்னுரிமை என்பது காலத்திற்கு எவ்வகையிலும் பொருந்தாது ஆகும். பட்டதாரி ஆசிரியர்கள் தொடக்கக் கல்வித் துறையில் நேரடியாக 2004 ஆம் ஆண்டு போட்டி தேர்வின் மூலமாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மாநில அளவிலான ஆசிரியர் தேர்வு வாரியத்தினுடைய தேர்வினால் தேர்வு செய்யப்பட்டு மதிப்பெண் அடிப்படையில் மாநிலம் முழுவதும் காலியாக இருந்த பணியிடங்களில் தொகுப்பூதியங்களில் நியமிக்கப்பட்டனர்.

தொகுப்பூதியங்கள் ரத்து செய்யப்பட்டு 1.8.2006 முதல் கால முறை ஊதியத்தில் கொண்டுவரப்பட்ட போது அவர்களது தர எண் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது. ஆனாலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலேயே தற்போது வரை முன்னுரிமை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பதவி உயர்வு இடம் மாறுதல் உள்ளிட்டவற்றில் பல்வேறு குழப்ப நிலைகள் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

போட்டித் தேர்வின் மூலம் மாநிலம் முழுவதும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்ட போதிலும் ஒரு சில ஒன்றியங்களில் முன்னுரிமையின் அடிப்படையில் காலிப் பணியிடம் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் 2004, 2005, 2006, 2010ஆம் ஆண்டு வரை நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் நடுநிலைப்பள்ளி தலை ஆசிரியர்களாகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஒரே பதவி உயர்வு வாய்ப்பான நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக இல்லை. ஒவ்வொரு ஒன்றியமும் மாவட்டத்திற்கு மாவட்டமும் பதவி உயர்வில் சீரற்ற நிலை காணப்படுகிறது. ஒரு சில ஒன்றியங்களில் பதவி உயர்வும் ஒரு சில மாவட்டங்களில் 19 ஆண்டுகளாகப் பதவி உயர்வு இல்லாத நிலையும் ஏற்படுகிறது.

ஒரு ஒன்றியத்திலிருந்து மற்றொரு ஒன்றியத்திற்கு அல்லது மாவட்டத்திற்கு மாறுதலில் செல்லும் போது ஊதியத்தில் எவ்வித இழப்பும் ஏற்படாவிட்டாலும் ஒரு பட்டதாரி ஆசிரியர் தன்னுடைய முன்னுரிமையை இழந்து அடுத்த ஒன்றியத்திற்கோ, மாவட்டத்திற்கோ செல்ல வேண்டிய நிலை உள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் மாநில அளவில் முன்னுரிமை கடைப்பிடிக்கப்படுகிறது. தொடக்கக்கல்வித்துறையில் நியமனம் பெற்ற ஆசிரியர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கோ, மாவட்டத்திற்கோ செல்ல இயலாத நிலை உள்ளது.

தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் வேறு ஒன்றியம் அல்லது மாவட்டத்திற்குப் பணி மாறுதலில் சென்றால் பணியிறக்கத்திற்கு உள்ளாகிறார். ஆனால், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் மாறுதலில் செல்ல அனுமதிக்கப்படுகிறார். தொடக்கக்கல்வித்துறையில் நியமனம் செய்யப்பட்டுள்ள அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் குறைந்தபட்சம் 2 பதவி உயர்வுகள் என்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

இடைநிலை ஆசிரியர், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், பிறகு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் என்ற முறையிலும், நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், வட்டாரக் கல்வி அலுவலர் என்ற முறையில் மாநில முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட நாளை அடிப்படையாகக் கொண்டு முன்னுரிமை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

தற்போது, தொடக்கக் கல்வித்துறையில் அனைத்து நியமனங்களும் மாநில அளவில் நடைபெறுவதால், அனைவருக்கும் மாநில முன்னுரிமை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு அவர்கள் பதவி உயர்வு பெற்ற தேதியை அடிப்படையாகக் கொண்டு மாநில அளவில் முன்னுரிமை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். ஊதிய முரண்பாடுகளைக் களைவதற்கு தொடக்கக்கல்வித்துறையில் மாநில அளவிலான முன்னுரிமை என்பது சரியாக இருக்கும். ஒரு ஒன்றியத்திலிருந்து மற்றொரு ஒன்றியத்திற்குப் பணி மாறுதல் செல்பவர்கள் அங்குக் குறைவான ஊதியம் பெறும் நிலை உள்ளது. அதனை மாற்றி அமைக்க வேண்டும்" என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:தென்மாவட்ட வெள்ள பாதிப்பு; நிவாரணத் தொகையை ரூ.15 ஆயிரமாக உயர்த்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details