தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2023, 6:30 PM IST

ETV Bharat / state

அவதூறு கருத்துகளை பதிவிடுவோரை கண்காணிக்க சிறப்புக் குழு; நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

அவதூறு மற்றும் தவறான கருத்துகளை பதிவிடும் சமூக வலைதளங்களை கண்காணிப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர் அலுவலகங்களில் சிறப்புக் குழுக்கள் அமைத்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதமாகவும் அரசியல் கட்சி தலைவர்களை கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடு யூடியூப், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களை வீடியோக்கள் வெளியிட தடை விதிக்கக் கோரி, சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் L.K.சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கருப்பர் கூட்டம் என்ற யூ-டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்த கொச்சையான விமர்சனங்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், யூடியூப், ஃபேஸ் புக், ட்விட்டர் நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று (அக்.14) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் P.முத்துக்குமார் ஆஜராகி அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், சமூக வலைதளங்களை கண்காணிக்கும் வகையில் அதன் நுணுக்கங்களை அறிந்த குழுக்களை அமைக்க வேண்டுமென கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு அதே ஆண்டு மார்ச் மாதம் சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாநகர காவல் ஆணையர் அலுவலகங்களில் அவர்களின் நேரடி கண்காணிப்பில், உதவி ஆய்வாளர் அந்தஸ்திற்கு குறையாத அதிகாரி தலைமையிலான சிறப்புக்குழு செயல்பட்டு வருவதாகவும், அரசு மற்றும் அதன் உயர் பதவியில் இருப்பவர்கள், நீதிபதிகள் உள்ளிட்டோர் குறித்த அவதூறு அல்லது தவறான கருத்துகளுடன் கூடிய பதிவுகளை வெளியிடுவதை தடுக்கும் வகையில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சமூக வலைதளங்களில் தவறான கருத்துகள் பதிவிடுவதை கண்காணித்து தடுப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள இந்த குழுக்களை தவிர, மாநில மற்றும் ஒவ்வொரு மாவட்ட அளவிலான குழுக்களை அமைக்கவும் உத்தரவிடப்படுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசின் அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:92 வயதான முதியவரிடமிருந்து வீட்டை ஏமாற்றி வாங்கியதாக மகன்கள் மீது புகார்!

ABOUT THE AUTHOR

...view details