கடந்த செப்டம்பர் மாதம் நடந்த நீட் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்வுக்காக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித் துறை தயாராகிவருகின்றது. அனைத்து மாவட்டங்களிலும் சேர்த்து இதுவரை 14 ஆயிரத்து 975 மாணவர்கள் பதிவுசெய்துள்ளதாகப் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் ஆயிரத்து 380 மாணவர்களும், குறைந்தபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 70 மாணவர்களும் பதிவுசெய்துள்ளனர். கடந்த ஆண்டு 19 ஆயிரத்து 680 மாணவர்கள் பதிவுசெய்த நிலையில், இறுதியாக ஆறாயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் ஆயிரத்து 615 பேர் தேர்ச்சிப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அமலுக்கு வருவதால் நடப்பாண்டில் 300 மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஆண்டில் 13 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் பணிகள் முடிக்கப்பட்டு தேசிய மருத்துவ ஆணையத்தின் அனுமதி பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு அனுமதி பெறப்பட்டு மேலும் கூடுதலாக 1500 இடங்கள் மருத்துவப் படிப்பில் கிடைக்கும். இதனால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் உருவாகும்.
குறைந்த கட்டணத்தில் மருத்துவப் படிப்பினைப் பெற முடியும் என்பதால், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மீண்டும் நீட் தேர்வு எழுத விரும்புகின்றனர். அதனடிப்படையில் நடப்பாண்டு நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் வரும் ஆண்டில் நீட் தேர்வு எழுதுவதற்கு அரசால் அளிக்கப்படும் இலவச பயிற்சியில் சேரலாம் என மாவட்ட கல்வி அலுவலர்களுக்குப் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.