தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழில் பெயர்ப்பலகை இல்லாத வணிக நிறுவனங்களுக்கு ரூ.2000 அபராதம்: தமிழக அரசு எச்சரிக்கை! - தமிழ் பெயர்ப்பலகை அபராதம்

Tamil Name board in shops: தமிழகத்தில் வணிக நிறுவனங்களில் பெயர்ப்பலகை தமிழில் வைக்காவிட்டால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழில் பெயர்ப்பலகை இல்லாத வணிக நிறுவனங்களுக்கு 2 ஆயிரம் அபராதம்
தமிழில் பெயர்ப்பலகை இல்லாத வணிக நிறுவனங்களுக்கு 2 ஆயிரம் அபராதம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 2, 2023, 9:02 PM IST

சென்னை: தமிழ்நாட்டிலுள்ள வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் இடம்பெற வலியுறுத்துதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று (நவ.02) நடைபெற்றது. அதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் செல்வராஜ், தமிழ் வளர்ச்சி இயக்குநர் ஔவை ந.அருள் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அக்கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள், கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றின் பெயர்ப் பலகைகள் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, முதலில் தமிழில் இடம்பெற வேண்டும் என்பதுடன், அதன் பின் ஆங்கிலத்திலும், தத்தம் தாய்மொழிகளிலும் (5:3:2) என்ற வீதத்தில் அமையப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இது குறித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசுகையில், "தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக எதிர்வரும் டிசம்பர் 21ஆம் தேதி முதல் நடத்தப்படும் ஆட்சிமொழிச் சட்ட வார நிகழ்ச்சியில், வணிக நிறுவனங்களின் பெயர்கள் தமிழில் முதன்மையாக அமைவதை வலியுறுத்தும் வண்ணம் பேரணி அல்லது விழிப்புணர்வுக் கூட்டங்கள், வணிகர் சங்கங்களுடன் இணைந்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடத்த வேண்டும்" என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: 'தென்னாட்டு ஜான்சி ராணி' அஞ்சலை அம்மாளின் சிலையைத் திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்..!

பின்னர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் குறிப்பிடுகையில், வணிக நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்குதல் மற்றும் புதுப்பித்தலின்போதே பெயர்ப்பலகைகள் தமிழில் முதன்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனக் கூறினார். மேலும் தான் பல மாவட்டங்களில் ஆய்வு செய்தபோது, ஆங்கிலப் பெயர் பலகைகள் தான் மிகுதியாகக் காணப்பட்டதாகக் குறிப்பிட்டதுடன், அந்நிலையை மாற்றி தமிழில் முதன்மையாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

பெயர்ப்பலகைகள் தொடர்பான விதிமீறல்களுக்கு விதிக்கப்படும் தண்டத்தொகை 50 ரூபாயில் இருந்து, 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்துவதற்கு வகை செய்யப்பட்டிருக்கிறது, என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஏ.ஆர்.டி ஜுவல்லரிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் ரெய்டு!

ABOUT THE AUTHOR

...view details