தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோடைப்பருவத்தில் சாகுபடி செய்யும் பயிறுவகைளில் மஞ்சள் தேமல் - ஆலோசனை வழங்கிய அரசு - மஞ்சள் தேமலை குணப்படுத்த ஆலோசனை

கோடைப்பருவத்தில் சாகுபடி செய்யும் பயிறுவகைளில் ஏற்படும் மஞ்சள் தேமல் நோயைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு ஆலோசனை வழங்கி செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

பயறுவகைளில் மஞ்சள் தேமல்
பயறுவகைளில் மஞ்சள் தேமல்

By

Published : Feb 11, 2022, 7:32 AM IST

சென்னை:தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 8 லட்சம் ஹெக்டேர் பரப்பில் பயிறுவகை பயிர்கள் குறிப்பாக உளுந்து, பச்சைப்பயிறு, துவரை, தட்டைப்பயறு போன்ற பயிறுவகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் காரீப் பருவத்தில் (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) சுமார் 30 விழுக்காடும், மீதமுள்ள 70 விழுக்காடு பயிறுவகைப்பயிர்கள் ராபிப் பருவத்திலும் (அக்டோபர் முதல் மார்ச் வரை) சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'பயிறு வகைப்பயிர்கள் குறுகிய காலத்தில் அதிக வருமானம் தருவதுடன், மண்வளத்தையும் பாதுகாக்கும் என்பதால், நடப்பாண்டில் சம்பா நெல் அறுவடைக்குப்பின்பு, பயிறுவகைப் பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்வதற்கு தமிழ்நாடு அரசு சீரிய முயற்சிகளை எடுத்துள்ளது.

இதுவரை, 1.6 லட்சம் ஹெக்டேரில் உளுந்து, பாசிப்பயிறு சாகுபடி செய்யப்பட்டு, வளர்ச்சிப்பருவத்தில் உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மஞ்சள் தேமல் நோய் வெளிப்படும் விதம்

தற்போது, பயிறு வகைப்பயிர்களில், மஞ்சள் தேமல் நோய் (Yellow Mosaic Virus) பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பயிர்களில் முதலில் இளம் இலைகளில் ஆங்காங்கே மஞ்சள் நிறப்புள்ளிகள் தோன்றி, பின்னர் இலை முழுவதும் திட்டுதிட்டாக ஒழுங்கற்ற மஞ்சளும், பச்சையும் கலந்த பகுதிகளாக மாறும்.

சில சமயம், நோயுற்ற இலைகள் சிறிதாகியும், சுருங்கியும் காணப்படும். நாளடைவில் மஞ்சள் நிறப்பகுதி அதிகமாகி, துளிர் இலைகள் முழுவதும் மஞ்சளாகிவிடும். நோயுற்ற செடிகளில் குறைந்த எண்ணிக்கையில் காய் பிடிக்கும். சில சமயங்களில் காய்களும் விதைகளும் மஞ்சளாக மாறிவிடும்.

செடிகளின் இளம்பருவத்தில் நோய் தோன்றினால் செடிகள் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டு, பெருமளவு மகசூல் இழப்பு ஏற்படும். இந்த மஞ்சள் தேமல் நோயானது வெள்ளை ஈயினால் பரவக்கூடியது என்பதால், ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு (IPM) முறைகளைப் பின்பற்றுவதே இந்நோயைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழிமுறையாகும்.

தடுப்புமுறைகள்

அதன்படி மஞ்சள் தேமல் நோய்த் தாக்குதலைத் தாங்கி வளரக்கூடிய வம்பன் 6, வம்பன் 7, வம்பன் 8 போன்ற உளுந்து ரகங்களையும், கோ 6 பாசிப்பயிறு ரகத்தையும் சாகுபடி செய்ய வேண்டும்.

மேலும், நோயினால் பாதிக்கப்பட்ட செடிகளை அப்புறப்படுத்த வேண்டும் எனவும்; பயிறு விதைப்புக்கு நடுவில், ஏழு வரிசைக்கு ஒரு வரிசை சோளப்பயிரை தடுப்புப்பயிராக விதைத்தால், வைரஸைப் பரப்பும் பூச்சிகளைத் தவிர்க்கலாம் எனவும் ஹெக்டேருக்கு 10 மஞ்சள் ஒட்டுப்பொறிகள் வீதம் வைத்து, அதில் ஒட்டும் பூச்சிகளை எளிதில் அகற்றலாம்’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 'விதைக்கும் முன் இமிடாகுளோப்ரிட் 600 FS என்ற மருந்தை கிலோவுக்கு 5 மி.லி., என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்கலாம். நோய்ப்பாதிப்பு தெரிந்தவுடன், இமிடாகுளோப்ரிட் 17.5 SL ஹெக்டேருக்கு 250 மி.லி., அல்லது டைமெத்தயோட் 30 EC 500 மிலி அல்லது தையோமீதாக்சம் 75 WG 100 கிராம் என்ற அளவில் காலை அல்லது மாலை வேளைகளில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்’ என விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

எனவே, நடப்புப் பருவத்தில் பயிறுவகைப் பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இந்த முறைகளைப் பின்பற்றி, மஞ்சள் தேமல் நோயைக் கட்டுப்படுத்துமாறு செய்தி குறிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பிரசவ வார்டுகளில் போதுமான மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும் - மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details