தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 30, 2020, 1:12 PM IST

ETV Bharat / state

உலக எய்ட்ஸ் தினம்- உறுதிமொழி ஏற்ற முதலமைச்சர்

தமிழ்நாட்டில் ஹெச்.ஐ.வி எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட அனைவரும் உறுதியேற்போம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்றுள்ளார்.

TN CM Edappadi Palanisamy pledged to make HIV AIDS free state
நTN CM Edappadi Palanisamy pledged to make HIV AIDS free state

சென்னை: எச்.ஐ.வி எய்ட்ஸ் நோய் தொற்றினை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு அரசால் தனி கவனம் செலுத்தப்பட்டதன் காரணமாக, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பின் புள்ளி விவரங்களின்படி தமிழ்நாட்டில் ஹெச்.ஐ.வி தொற்றின் சதவிகிதம் 2010-11ஆம் ஆண்டு 0.38 விழுக்காட்டிலிருந்து 2019ஆம் ஆண்டு 0.18 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக எய்ட்ஸ் தின செய்தி மக்களிடையே எச்.ஐ.வி எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் நாள் உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான உலக எய்ட்ஸ் தினத்தின் மையக் கருத்து “உலகளாவிய ஒற்றுமை, பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளுதல்” (Global Solidarity, Shared Responsibility) ஆகும்.

புதிய எச்.ஐ.வி தொற்றினை கண்டறிய மூன்றாயிரத்து,161 நம்பிக்கை மையங்கள் மற்றும் 16 நடமாடும் நம்பிக்கை மைய வாகனங்களைக் கொண்டு எச்.ஐ.வி தொற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன் 216 பால்வினை நோய் தொற்று சிகிச்சை மையங்களின் மூலமாக சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 55 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்களும், 174 இணை கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்களும் செயல்பட்டு வருகின்றன.

எச்.ஐ.வி தொற்றுள்ள பெற்றோரிடம் இருந்து கருவிலுள்ள குழந்தைகளுக்கு நோய் பரவாமல் தடுக்க அனைத்து கருவுற்ற பெண்களுக்கும் சிறப்பு மருத்துவ சிகிச்சை மாவட்டந்தோறும் உள்ள அரசு மருத்துவமனைகளில்செயல்படும் நம்பிக்கை மையம் மற்றும் கூட்டு மருந்து சிகிச்சை மையங்களில் அளிக்கப்படுகிறது.

எச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் உயரிய நோக்கில் அரசு அவர்களுக்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 ஓய்வூதியம் வழங்குதல், எச்.ஐ.வி தொற்று பாதிக்கப்பட்ட இளம் விதவைகளுக்கு வயது வரம்பை தளர்த்தி மாத ஓய்வூதியம் வழங்குதல், எச்.ஐ.வி எய்ட்ஸ் தொற்றுள்ளோர் சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றுவர கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மேலும், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு, சிகிச்சை, பராமரிப்பு மற்றும் தொடர் சேவைகள் கிடைக்கப் பெற இளைப்பாருதல் மையம் (Drop in Centre) என்னும் திட்டத்திற்காக 2.41 கோடி ரூபாய் நிதியுதவியுடன் மாநிலம் முழுவதும் சுமார் 34 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, நடப்பு நிதியாண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

எச்.ஐ.வி எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, தமிழ்நாட்டில் எச்.ஐ.வி எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட உறுதியேற்று, எச்.ஐ.வி எய்ட்ஸ் தொற்று உள்ளோரும் நம்மில் ஒருவரே என்பதை மனதில் கொண்டு, அவர்களையும் மனிதநேயத்துடன் அரவணைத்து ஆதரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஹெச்ஐவி-யை கட்டுப்படுத்த உலக நாடுகளுக்கு உதவ முன்வரும் இந்தியா

ABOUT THE AUTHOR

...view details