கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய பாஜக நிர்வாகி கல்யாணராமன், நபிகள் நாயகம் பற்றி இழிவாகப் பேசினார். இதனை கண்டித்தும் கல்யாண ராமனை கைது செய்ய கோரியும் தமிழ்நாட்டின் பல பகுதியில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் பல்வேறு அரசியல் கட்சியினரும் இச்சம்பவத்தை கண்டித்தனர். இந்த நிலையில், கல்யாணராமன் மீது மதங்களிடையே பிரிவினை ஏற்படுத்தி மோதல் ஏற்படுத்த முயற்சித்தல், தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முயற்சித்தல் உட்பட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பாஜக மதம் சார்ந்த அரசியல் செய்யாது - அண்ணாமலை - அண்ணாமலை கண்டனம்
முகமது நபி குறித்து யார் தவறாக பேசியிருந்தாலும் அது கண்டிக்கதக்கது என்று பாஜகவின் தமிழ்நாடு துணைத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

annamalai
இதனையடுத்து பாஜகவின் தமிழ்நாடு துணைத் தலைவர் அண்ணாமலை ட்விட்டர் வாயிலாக கல்யாண ராமனின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பாஜக தேசியமும் ஆன்மீகமும் கொள்கை என்று கொண்டுள்ளது. பாஜக என்றும் மதம் சார்ந்த அரசியல் செய்யாது. மாற்று மதத்தினரின் இறை நம்பிக்கையை இழிவுபடுத்துகின்ற கட்சி பாஜக கிடையாது. முஹம்மது நபி(ஸல்) அவர்களை பற்றி யார் தவறாக பேசியிருந்தாலும் அது கண்டிக்கதக்கது" என பதிவிட்டுள்ளார்.