சென்னை:சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று(ஜூலை 3) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு, கர்நாடகா இரண்டு மாநிலங்களுக்கு இடையே உள்ள நதிநீர் பகிர்வு பிரச்சனையில் திராவிட முன்னேற்ற கழகம் அதிக அளவில் அரசியல் செய்து வருகிறது. கர்நாடக மாநிலத்தைப் பொறுத்தவரை காவிரி ஆற்றில் பாஜக எந்த அரசிலும் இதுவரை செய்யவில்லை. ஆண்டாண்டு காலமாக தமிழ்நாடு, கர்நாடகாவுக்கு காவிரி பிரச்சனை இருந்து வருகிறது, அதற்கான நிரந்தர தீர்வாக பிரதமர் நரேந்திர மோடி காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைத்தார்.
காவிரியில் மேகதாது அணை கட்டுவேன் என இல்லாத ஒரு பிரச்சினையை கர்நாடகாதான் கிளப்பி விட்டது. அதனை தமிழக பாஜக ஆக்ரோஷமாக கண்டித்த பிறகு, இது குறித்து நாடாளுமன்றத்திலும் இரண்டு மத்திய அமைச்சர்கள் தமிழகத்தின் அனுமதி இல்லாமல் காவிரி ஆற்றில் அணை கட்ட முடியாது என தெரிவித்துள்ளனர். இதனை மீண்டும் ஆரம்பித்துள்ளது காங்கிரஸ் கட்சி. கர்நாடகாவில் தேர்தல் வாக்குறுதியின் போது மேகதாதுவில் அணை கட்ட போகிறோம், அதனால் நிதியும் ஒதுக்கப் போகிறோம் என கூறினார்கள். அப்போது நான் கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தில் இருந்தபோது அதனை கண்டித்தேன். ஆனால், இது குறித்து தமிழக அரசியல் கட்சிகள் எதுவும் வாய் திறக்கவில்லை. தற்போது இந்த ஆண்டு காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது எனவும் கூறியுள்ளனர்.
காவிரி தண்ணீரால் லட்சக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரம் அடைந்து வருகின்றனர். காவிரி நதிநீரை நிறுத்திவிட்டால் மிகப்பெரிய கஷ்டத்திற்கு தமிழகம் சென்று விடும். அகில இந்திய அளவில் தலைவராக வருவதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் அனைத்து எதிர்க்கட்சிக் கூட்டத்திற்கு சென்றால், நம்மை ஏற்றுக் கொள்வார்கள் என ஸ்டாலின் நினைக்கிறார். ஆனால், காவிரி பிரச்சனை குறித்து அம்மாநில முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரை கண்டிப்பதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு மனமில்லை, காங்கிரஸ் கட்சியை காண்டிப்பதற்கும் மனமில்லை. பெங்களூரில் அனைத்து எதிர்க்கட்சி கூட்டத்திற்கு மட்டும் ஸ்டாலின் எப்படி செல்ல முடியும்?
இதே போல் முல்லைப் பெரியாறு அணையிலும் இரண்டு பிரச்சனைகள் ஏற்பட்டது. முல்லைப் பெரியாறு அணையில் அனுமதி இல்லாமல் ஷட்டர் திறக்கப்பட்டு தண்ணீர் விடப்பட்டது. இதனால் ஷட்டர் உடைந்து நான்கு நாட்களாக தண்ணீர் வெளியேறியது. ஸ்டாலின் முதல்வராக வந்த பின்புதான் முதல்முறையாக முல்லைப் பெரியாறு அணையிலும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இவை எதையும் கவனிக்காமல் தமிழக முதல்வர் ஸ்டாலின் பெங்களூரில் நடக்கும் எதிர்க்கட்சிக் கூட்டத்திற்கு சென்று வந்தால், ஸ்டாலினை கண்டித்து ஒவ்வொரு பாஜக தமிழக பாஜகவினரும், விவசாயிகளும் கோ பேக் ஸ்டாலின் என வீட்டின் முன்பு பதாகைகளை வைப்போம். விமான நிலையத்திற்கு வெளியே வீதியில் நின்று அனைவரும் கருப்பு பலூன் பறக்க விடுவோம்.