தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 8, 2020, 10:04 PM IST

ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாடு அரசு எதிர்க்குமா? - துரைமுருகன்

சென்னை: மத்திய அரசு கொண்டுவரும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாடு அரசு எதிர்த்து பேசத் தயராக உள்ளதா? என்று கூறுங்கள் உங்களை நம்புகிறோம் என்று துரைமுருகன் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் விமர்சித்து பேசினார்.

duraimurugan
duraimurugan

நேற்றைய சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எம்எல்ஏ செம்மலை, எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் இடையே நடந்த உரையாடல்.

செம்மலை: குடியுரிமை விவகாரத்தில் இலங்கைத் தமிழர்கள் மீது மிகுந்த அக்கரையோடு திமுகவினர் பேசுகிறீர்கள். 2009ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். 2010ஆம் ஆண்டில் உங்கள் ஆட்சியில் அவரது தாயார் பார்வதி அம்மாள் மருத்துவ சிகிச்சைக்காக தமிழ்நாட்டிற்கு வந்தார். ஆனால் அவரை இலங்கைக்கே திருப்பி அனுப்பினீர்கள்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த குட்டிமணி, ஜெகன் ஆகியோர் இங்கு அடைக்கலம் தேடி வந்தபோது அவர்களைக் கைது செய்தீர்கள். இவ்வளவும் செய்துவிட்டு இன்று அவர்கள் மேல் அக்கரை கொண்டதுபோல நாடகம் ஆடுகிறீர்களே? ஏன் இரட்டை நிலை எடுக்கிறீர்கள்?

துரைமுருகன்: இந்த அற்புதமான பேச்சுக்கு செம்மலையை நான் பாராட்டவில்லை. ஆனால் செம்மலையையே அப்படிப் பேச வைத்த முதலமைச்சரை பாராட்டுகிறேன்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்: நீங்கள் சிண்டு முடியாதீர்கள். அதற்கு நாங்கள் இடம் தரமாட்டோம்.

துரைமுருகன் பதில்: ஏதோ இலங்கை பிரச்னையில் ஆரம்பத்திலிருந்தே அதிமுக ஒரே சீரான நிலையில் இருந்ததுபோல செம்மலை பேசுகிறார். பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று கேட்டது ஜெயலலிதாதானே. போர் என்றால் சிலர் சாகத்தான் செய்வார்கள் என்று சொல்லியதும் அவர்தானே.

செம்மலை: பிரபாகரனை முதலில் ஆதரித்தது எம்.ஜி.ஆர், ஜெயலலிதாதான். பிரபாகரன் நல்ல பாதையில் போகும்போது ஆதரித்தோம். வழி தவறிச் சென்றபோது உதவுவதை நிறுத்திவிட்டோம். 2003ஆம் ஆண்டில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியின்போதுதான் சிஏஏ என்ற குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 14(ஏ) பிரிவு அறிமுகம் செய்யப்பட்டது. 16 ஆண்டுகள் ஆகியும் இங்குள்ள இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லையே. முதலில் சட்டத்தை சரிவர தெரிந்துகொண்டு பேசுங்கள்.

துரைமுருகன்: சட்டத்தை நாம் இருவரும் ஒரே கல்லூரியில்தான் படித்தோம். உங்களைப்போல நானும் புரிந்துகொண்டுதான் பேசுகிறேன். சமணர்கள், பவுத்தர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள் ஆகியோரை அழைப்பதை வரவேற்கிறோம். ஆனால் அதில் இஸ்லாமியர்களையும், இலங்கைத் தமிழரையும் சேருங்கள் என்பதே எங்களின் கோரிக்கை.

இவர்களிடம் ஏன் நீங்கள் மாற்றான்தாய் மனப்போக்கை மேற்கொள்கிறீர்கள்?

செம்மலை: அந்தச் சட்டத்துக்கான தாக்கீது இன்னும் தமிழ்நாடு அரசுக்கு வரவில்லை. அது வந்தால் நிச்சயம் எந்த மதத்தினருக்கும் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு அளிக்கும்.

துரைமுருகன்: நீங்கள் பாதுகாப்பு அளிப்பது பற்றி நாங்கள் பேசவில்லை. ஆனால், அந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. நீட் தேர்வு பற்றியும் இதேபோலத்தான் பேசினீர்கள். இறுதியில் நீட் வந்துவிட்டதே. என்சிஆர். என்ற தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம் வந்தால் அதை எதிர்ப்போம் என்று இப்போது சொல்லுங்கள்.

நாங்கள் உங்களை நம்புவோம். அதை எதிர்த்து வாள் உருவி நிற்பீர்களா?

அமைச்சர் உதயகுமார்: ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோதுதான் அந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இல்லாததை நீங்கள் உருவாக்கிப் பேசுகிறீர்கள்.

துரைமுருகன்: ப.சிதம்பரம் கொண்டு வந்தபோது, அதுபற்றி ஆராய கமிட்டி போடப்பட்டு, அதோடு அது செத்துவிட்டது. ஆனால், என்ஆர்சியை கொண்டு வருவதற்கு தற்போதுள்ள மத்திய உள்துறை அமைச்சர் உறுதியாக இருக்கிறார். அதை ஏற்கமாட்டோம் என்று நீங்கள் சொன்னால் போதும். இவ்வாறு காரசாரமான விவாதம் நிகழாது என்றார்.

ABOUT THE AUTHOR

...view details