சென்னை:கடந்த 2019ஆம் ஆண்டு, தமிழ்நாட்டின் சென்னை மற்றும் நாகை மாவட்டங்களில் தலா இரு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். நாகையில் மஞ்சக்கொல்லை மற்றும் சிக்கல் ஆகிய ஊர்களில் நடந்த சோதனையின் முடிவில், ஹாரிஸ் முகமது, அசன் அலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கணினிகள், மடிக்கணினிகள், செல்போன்கள், சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்கள் இருவரும் 'அன்சாருல்லா' என்ற தடை செய்யப்பட்ட அமைப்பின் மூலம் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாகவும், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதனிடையே அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், டெல்லியில் 14 பேரை என்ஐஏ அலுவலர்கள் கைது செய்தனர். அவர்களும் ’அன்சாருல்லா’ அமைப்பிற்காக செயல்பட்டவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும் ஒருவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்: ஐக்கிய அரபு நாடுகளில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவதாகக் கூறி, அங்கிருந்து வெளியேற்றப்பட்ட 14 பேரையும், டெல்லி விமான நிலையத்தில் இறங்கியபோது தேசியப் புலனாய்வு முகமை அமைப்பு அலுவலர்கள் கைது செய்து, தனி விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தனர். 14 பேரும் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகமைக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.