சென்னை: தமிழ்நாடு அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம், National Highway Logistics Management Ltd, சென்னை துறைமுகம் ஆகியவை இணைந்து பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் திருவள்ளூர் மாவட்டம் மப்பேட்டில் ஆயிரத்து 200 கோடி ரூபாய் முதலீட்டில் 'பல்முனைய சரக்குப் போக்குவரத்துப் பூங்கா' தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நிகழ்வானது மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நேற்று (அக். 12) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் காணொலிக் காட்சி வாயிலாக ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, "தமிழ்நாடு தொழில் துறை வரலாற்றில் இது ஒரு முக்கியமான நாள் ஆகும். அரசுடன் இணைந்து பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் பல்முனைய சரக்குப் போக்குவரத்துப் பூங்காவை ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் தொடங்குவது உண்மையில் மகிழ்ச்சி அளிப்பது ஆகும்.
தமிழ்நாட்டில் அமையும் முதலாவது பல்முனைய சரக்குப் போக்குவரத்துப் பூங்காவாக இது அமைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், 158 ஏக்கர் பரப்பளவில் ஆயிரத்து 200 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது.
இந்தப் பூங்கா அமையும் பகுதி மிக மிக முக்கியமான தொழில் பகுதியாக இருக்கிறது. பெரிய தொழிற்சாலைகள் திரளாக அமைந்துள்ள திருப்பெரும்புதூர், பிள்ளைப்பாக்கம், ஒரகடம் ஆகிய பகுதிகளுக்கு மிக அருகில் இப்பூங்கா அமையப் போகிறது.
இந்தப் பூங்கா சென்னை எல்லை சுற்றுவட்டச் சாலைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. சென்னை விமான நிலையம், சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளி துறைமுகம் ஆகியவற்றைச் சிறப்பான முறையில் இணைக்க வழிவகை செய்கிறது. அனைத்து வசதிகளும் கொண்ட இடத்தில் அமைய இருக்கிறது. அதேபோல், உலகத் தரம் வாய்ந்த வசதிகளும் இதில் இருக்கின்றன.
* ரயில் மற்றும் சாலை இணைப்புகளுடன் சரக்கு முனையம்
* சேமிப்புக் கிடங்கு