சென்னையில் ஒரே நாளில் 3 பேர் தூக்கு மாட்டி தற்கொலை - three person suicide in chennai
சென்னை: மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் ஒரே நாளில் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

சென்னை ஆலந்தூர் சவுரி தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (39). இவர் பெயிண்டராக பணிப்புரிந்து வந்துள்ளார். மேலும் தற்போது ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் வீட்டிலேயே முடங்கியிருந்ததால், அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த ஆரோக்கியராஜ் வீட்டின் படுக்கையறைக்குச் சென்று கயிற்றில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தந்தை தாமஸ் உடனடியாக புனித தோமையார் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார். சம்பவம் இடம் சென்ற காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதேபோல் நெற்குன்றம் பகுதியிலும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த தேசிங்கு என்பவரின் மூத்த மகள் பவானி (25). இவருக்கு கடந்த இரு வருடங்களுக்கு முன்பு விக்னேஷ் என்பவருடன் திருமணமாகி, கணவர் வீட்டுக்குச் சென்றுள்ளார். ஊரடங்கு காரணமாக தனது தாய் வீட்டிற்கு பவானி வந்துள்ளார். அப்போது பவானியை அவரது தாய் துணி துவைக்கக் கூறி வற்புறுத்தியதால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் பவானி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதேபோன்று மேலும் ஒரு சம்பவம் பார்க் டவுன் பகுதியிலும் நடைபெற்றுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த பால சுப்பிரமணியன்(82).இவருக்கு கடந்த சில நாடள்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த பால சுப்பிரமணியம் வீட்டின் மின் விசிறியில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக மகன் அளித்த புகாரின் அடிப்படையில் பூக்கடை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.