தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Odisha Train Accident: குலுங்கிய ரயில், பிணக்குவியல்: விபத்தில் சிக்கி மீண்டவர்களின் பேட்டி

ஒடிசாவில் விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் பயணித்த மூன்று பயணிகள் பத்திரமாக தமிழகம் திரும்பினர்.

By

Published : Jun 3, 2023, 6:48 PM IST

three passengers arrived chennai airport safely from odisha coromandel express train accident
கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கி உயிர்தப்பியவர்கள் சென்னை விமான நிலையத்தில் பேட்டி

கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கி மீண்டவர்கள் பேட்டி

சென்னை: நேற்று கொல்கத்தாவில் உள்ள ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது. இந்த ரயிலானது ஒடிசாவின், பாலசோர் மாவட்டத்தில் நேற்று இரவு 7 மணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இதில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி அருகில் செல்லும் மற்றொரு தண்டவாளத்தில் விழுந்தது. அடுத்த சில நிமிடங்களில் அதே வழித்தடங்களில் வந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் ரயிலும், சரக்கு ரயில் ஒன்றும் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் உடனடியாக விரைந்தனர். உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தேசிய, மாநில மீட்பு படையினருடன் விமானப்படையினரும் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். விபத்து நடைபெற்றது இரவு நேரம் என்பதால் மீட்புப் பணியில் கடும் சவால் ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 280 பேர் பலியாகியுள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: ஒடிசா ரயில் விபத்து - உலகத் தலைவர்கள் இரங்கல்

இந்நிலையில் கோரமண்டல் ரயிலில் தமிழ்நாட்டை சேர்ந்த 100 பேர் வரை, பயணம் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் 30 பேர் நிலைமை என்னவென்று இதுவரை தெரியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் விபத்து ஏற்பட்டும் பாதிப்பு ஏற்படாத ரயில் பெட்டிகளில் பயணம் செய்த தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் சென்னை திரும்பியுள்ளனர்.

சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த ராஜலஷ்மி, ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த நாகேந்திரன், நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த ரமேஷ் ஆகியோர் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பல்லாவரம் பகுதியை சேர்ந்த ராஜலஷ்மி, “ரயிலில் பி8 பெட்டியில் பயணித்திருந்தோம். தனக்கு முன்னால் இருந்த பெட்டி தடம் புரண்டு பெரிய விபத்துக்கள் ஆனது.

ஆனால் நான் இருந்த பெட்டியில், பெரிய அளவு பாதிப்பு ஏற்படவில்லை. தொடர்வண்டி குலுங்க மட்டுமே செய்தது. விபத்து நடைபெற்ற பகுதியிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் தேசிய நெடுஞ்சாலை இருந்ததால் அங்கிருந்து நடந்து சென்று பேருந்து மூலம் புவனேஸ்வர் அடைந்தோம்.

தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பிலும் ரயில்வே நிர்வாகம் சார்பிலும் தொலைபேசி மூலமாக தங்களை குறித்து விசாரித்துக் கொண்டே இருந்தனர்” எனத் தெரிவித்தனர். மேலும் அரசு உதவி இல்லாமல் தாங்களாகவே தமிழகம் வந்ததாக தெரிவித்தனர். இதனை அடுத்து நாகேந்திரன், “கடவுள் கொடுத்த மறு வாய்ப்பாக இதை பார்க்கிறேன். தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து தொடர்பு கொண்டு விசாரித்தனர். உள்ளூர் மக்கள் நிறைய உதவியாக இருந்தார்கள். மீட்பு குழுவினர் வருவதற்கு முன்பாகவே உள்ளூர் மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: Odisha Train accident: விபத்து நடந்தது எப்படி? உயிர் தப்பிய பயணியின் பதைபதைக்கும் அனுபவம்!

ABOUT THE AUTHOR

...view details