தி.மு.க வின் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்றது. இதில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன்,சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய திருமாவளவன், "திராவிட முன்னேற்ற கழகம் சென்னையை பொறுத்தவரையில் தலித் மக்களின் பேராதரவை பெற்றது என்பதை யாரும் மறுத்தவிட முடியாது. முதல் மாவட்ட செயலாளராக பரிதி இளம்வழுதி அவர்களின் தந்தை இளம்பரிதி இருந்தார் என்பது பெருமைக்குரியது. தந்தையும் மகனும் திராவிட முன்னேற்ற கழகத்துக்கு விசுவாசமாக இருந்தவர்கள் என்பதை வரலாறு ஒருபோதும் மறைத்துவிடாது.
சீன அதிபரும், இந்திய பிரதமரும் தமிழ்நாட்டின் மாமல்லபுரம் கடற்கரையில் சந்திக்கின்றனர். தமிழ்மொழியால் சீன அதிபரை வரவேற்கிறேன் என்று பிரதமர் மோடி பேசுகிறார். கடற்கரையை சுத்தம் செய்கிறேன் என்று குப்பைகளை அள்ளுகிறார். இவையெல்லாம் உள்நோக்கம் கொண்டவை என்று நாம் கூறவில்லை என்றாலும், தமிழ்நாடு குறி வைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் யாரும் மறந்துவிட முடியாது.