தமிழ்நாடு

tamil nadu

வீடு புகுந்து நகைக் கொள்ளை: 4 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளி கைது

By

Published : Feb 16, 2022, 3:39 PM IST

சென்னையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஆளில்லா வீட்டிற்குள் நுழைந்து நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றவரை ஹேர் ஸ்டைல் மூலம் சென்னை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

வீடு புகுந்து நகை கொள்ளை
வீடு புகுந்து நகை கொள்ளை

சென்னை: அயனாவரத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் 2018ஆம் ஆண்டு தனது வீட்டைப் பூட்டிவிட்டு கெல்லீசில் தான் நடத்திவரும் பல்பொருள் அங்காடிக்குச் சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டின் பூட்டை உடைத்த அடையாளம் தெரியாதவர்கள் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 20 சவரன் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்றனர்.

இது தொடர்பாக சென்னை அயனாவரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடிவந்தனர். ஆனால், சம்பவம் நடைபெற்று கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாகியும் இந்த வழக்கில் துப்பு கிடைக்காததால் வழக்கை கிடப்பில் போட்டனர்.

இது குறித்து கார்த்திகேயன் சென்னை மாநகர காவல் ஆணையரைச் சந்தித்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்டுத் தருமாறு மீண்டும் புகார் அளித்தன் அடிப்படையில், கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் தனிப்படை காவல் துறையினர் மீண்டும் வழக்கை விசாரித்தனர்.

கொள்ளை நடந்தபோது அந்தப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை வைத்து தனிப்படை காவல் துறையினர் தீவிரமாக மீண்டும் விசாரணை தொடங்கினர். மற்றொரு திருட்டு வழக்கில் இதே மாதிரியான ஹேர் ஸ்டைலில் திருடி கைதான எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ரூபன் என்பவர்தான் கொள்ளையில் ஈட்டுபட்டார் எனத் தெரியவந்தது.

இதனையடுத்து ரூபனை கைதுசெய்து விசாரணை நடத்தியதில், முரளி என்கிற கூட்டாளியோடு சேர்ந்து, ஆள் இல்லாத வீடுகளை கொள்ளையடித்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும் நகைகளை, கொள்ளையடித்த பின்பு காவல் துறையினருக்குச் சந்தேகம் ஏற்படாத வகையில் உள்ளாடைக்குள் மறைத்து அந்தப் பகுதியிலிருந்து சென்றுவிடுவதாகவும் விசாரணையில் கூறியிருக்கிறார்.

அதே பாணியில்தான் அயனாவரம் கார்த்திகேயன் வீட்டிலிருந்து 20 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்ததாகத் தெரிவித்துள்ளார். கொள்ளையடிக்கப்பட்ட நகையில் தனக்குப் பங்கு கொடுக்காததால் அது தொடர்பாக தனக்கும் முரளிக்கும் முன்விரோதம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

வீடு புகுந்து நகை கொள்ளை

இதன்பின்பு கோயம்பேட்டில் இருசக்கர வாகனத் திருட்டு, சில வழக்குகளில் கைதுசெய்யப்பட்டு சிறை சென்றுவந்த அவர், கடந்த ஆறு மாதமாகக் கொள்ளையடிக்கும் தொழிலை விட்டுவிட்டு திருந்தி சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றிவந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

கைதான ரூபனிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகையில் 32 கிராம் தங்க நகையை மீட்டுள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய முரளியை தனிப்படை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை மீரா மிதுனுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்

ABOUT THE AUTHOR

...view details