வடகிழக்கு பருவமழை, நிவர் புயல் எதிரொலியாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பொழிந்தது. இதனால் புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி வருகிறது.
இதேபோல் சென்னை மாநகருக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் நீர் உயர தொடங்கி உள்ளது. தற்போது ஏரிகளுக்கும் நீர் வரத்து அதிகமாக உள்ளது.
இதன் காரணமாக வருகின்ற கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பொதுப்பணித்துறை, குடிநீர் வாரிய அலுவலர்கள் தெரிவித்த தகவல்களின் படி, சென்னை மாநகருக்கு பூண்டி, சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர்வருகிறது. தற்போது மத்திய உள்துறை அமைசர் அமித்ஷா திறந்து வைத்த கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்தேக்கமும் இந்த ஏரிகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இதனால் சென்னை மக்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்க வாய்ப்பு அதிகமுள்ளது தெரிய வருகிறது.
தற்போது ஏரிகளில் 8 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், ஏரிகளுக்கு வரும் நீரின் அளவை கண்காணித்து வருகிறோம். ஏரிகள் தற்போது தூர்வாரப்பட்டு இருப்பதால் கூடுதலாக தண்ணீர் சேமிக்க முடியும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சராசரியாக ஒரு மாதத்திற்கு சென்னை மாநகருக்கு 1 டி.எம்.சி. வரை குடிநீர் தேவைப்படுகிறது. ஏரிகளில் போதுமான அளவு நீர் இருப்பதால் சென்னை மாநகருக்கு தினசரி 750.87 மில்லியன் லிட்டர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதே நிலையில் தொடர்ந்து தண்ணீர் வழங்கப்படும். வருகிற கோடைக்காலத்திலும் போதுமான அளவு குடிநீர் விநியோகம் தடையின்றி வழங்க வாய்ப்புள்ளதாகவும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.