தமிழ்நாடு

tamil nadu

'வாத்தி ரெய்டு...' உழைக்காதவர்களுக்கு கட்சியில் இடமில்லை - எச்சரித்த ஸ்டாலின்

By

Published : May 14, 2023, 4:51 PM IST

மாவட்டச் செயலாளர்கள் தங்களது பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்றும், உழைக்காதவர்களுக்கு கட்சியில் இடம் இல்லை எனவும் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Stalin
ஸ்டாலின்

சென்னை:முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொகுதி பார்வையாளர்களும் கலந்து கொண்டனர். கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும், பூத் கமிட்டி அமைத்தல், உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்டப் பணிகள் குறித்தும், ஜூன் 3ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "ஒவ்வொரு தொண்டனும் மகிழ்ச்சியாக இருக்க ஆட்சி எவ்வளவு முக்கியமோ, அதை விட கட்சி முக்கியம். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். நம் கவனம் எல்லாம் கட்சியை வலுப்படுத்துவதிலும், தொண்டர்களை உற்சாகமாக வைத்துக் கொள்வதிலும் அதிகமாக இருக்க வேண்டும்.

தொண்டர்கள் யாராவது, குறைகளைச் சொன்னால், அதை காது கொடுத்துக் கேட்க வேண்டும். இயக்கம் என்பது தலைமை தொடங்கி, கடைக்கோடி தொண்டன் வரை உளப்பூர்வமாக பிணைந்திருக்கும் அமைப்பு. ஒவ்வொரு மட்டத்திலும் ஒவ்வொருவருக்கும் ஆதரவும், அன்பும் இருக்க வேண்டும். எந்த மட்டத்திலும் சுணக்கமோ, மனவருத்தமோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நம் அனைவரின் பொறுப்பு.

ஒவ்வொரு தொண்டனும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். உழைக்காதவர்களுக்கு கட்சியில் இடமில்லை. மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகளை கண்காணித்து வருகிறேன். கட்சிப் பணிகளை பொறுப்போடு செய்ய வேண்டும், இல்லையென்றால் மாற்றப்படுவீர்கள். நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். வாக்குச்சாவடி குழுக்களுக்கான பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.

அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியினரின் நலன் சார்ந்து செயலாற்ற வேண்டும். சுணக்கமாக செயல்படும் மாவட்டச் செயலாளர்கள் தங்கள் பணிகளை வேகப்படுத்த வேண்டும். கருணாநிதி நூற்றாண்டு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்க இருப்பதால், ஏற்பாடுகளை வெகு சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: "விடியா அரசில் தலைத்தூக்கிய கள்ளச்சாராய கலாச்சாரம்" விழுப்புரம் சம்பவத்தை தொடர்ந்து ஈபிஎஸ் கடும் விமர்சனம்!

ABOUT THE AUTHOR

...view details