சென்னை: உடையம்பாளையத்தைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் அணி மாவட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தாக்கல்செய்த மனுவில், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கோவையிலிருந்து திமுக, கூட்டணிக் கட்சி சார்பில் மக்கள் பிரதிநிதிகள் எவரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், கோவை நகர் மேற்கு மாவட்ட திமுக செயலாளரான பையா ஆர். கிருஷ்ணன், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிபோல, அரசு நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்கிவருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சியில் தலைமையேற்று, நிவாரண உதவிகளை வழங்கியதாகவும், இது சட்டவிரோதம் என்பதால், அவர் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவும், தலைமையேற்கவும் தடைவிதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தாக்கல்செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர் முத்துகுமார் தெரிவித்தார்.
வழக்கமாக, அரசு நிகழ்ச்சிகளில் அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றபோதும், இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள எந்தத் தடையும் இல்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க திமுக மாவட்டச் செயலாளருக்குத் தடைவிதித்து உத்தரவிட முடியாது எனக் கூறி, வழக்கை முடித்துவைத்தனர்.
இதையும் படிங்க:பெகாசஸ்: உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை கோரும் திருமாவளவன் எம்பி