தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், “சி” ஜோன் தடகளப் போட்டிகள் நடைபெற்றன. உத்தமபாளையம் கல்வி மாவட்ட அளவிலான இப்போட்டியில், 23 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ – மாணவியர்கள் பங்கேற்றனர். இதில் 100.மீ, 200.மீ, 400.மீ, 800.மீ 1,500.மீ என பல்வேறு பிரிவுகளின் கீழ் ஓட்டப்பந்தயம், தட்டெறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
இந்த போட்டிகளில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மாணவ - மாணவிகளுக்குப் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் பங்கேற்று போட்டியில் மாணவ மாணவிகளுக்குப் பரிசுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கிச் சிறப்பித்தார்.
விளையாட்டு தொடர்பாக மாணவர்களுக்கு அனைத்து வகையிலும் உதவ தயார்..! ஓபிஆர் பின்னர் பேசிய அவர், “தேர்தல் வாக்குறுதியில், சொன்னதுபோல தேனி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும், விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு, அதில் சிறந்து விளங்கக்கூடிய விளையாட்டு வீரர்களை மாநில அளவிலும், தேசிய, சர்வதேச அளவிலும் நடைபெறும் அனைத்துப் போட்டிகளில் பங்கேற்க மத்திய அரசிடம் இருந்து அனைத்து உதவிகளையும் பெற்றுத் தருவேன். அதனை மாணவ - மாணவிகளும் பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை தேடித்தர வேண்டும்.
ஸ்போர்ட்ஸ் அகாடமியை உருவாக்கி, சிறந்த ஆசிரியர்களை மூலம் தேனி மக்களவைத் தொகுதியிலிருந்து சிறந்த விளையாட்டு வீரர்களையும், வீராங்கனைகளையும் உருவாக்க உள்ளேன்” என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ – மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர். விழா நிறைவில் மாணவ - மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.