கரோனா தொற்றால் சென்னையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும் குணமடைந்தோரின் விழுக்காடு அதிகரித்து வருகிறது. கரோனா பரவலைத் தடுக்க கிருமிநாசினி தெளிப்பது, மக்களுக்கு முகக்கவசம் வழங்குவது, மருத்துவ முகாம்கள் அமைப்பது என மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தங்கிவந்த முழுத் தெருவையும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி அறிவித்திருந்தது.
இது மக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தியதால் ஒரு தெருவில் மூன்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் தொற்று இருந்தால் மட்டும் தெருவைக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி அறிவித்து வருகிறது. இதையடுத்து, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் குணமடைந்தோரின் விழுக்காடு தினமும் அதிகரித்து வருவதால் கட்டுப்பாட்டுப் பகுதிகளும் குறைந்து வருகிறது.
தற்போது சென்னையில் எட்டு கட்டுப்படுத்தப்பட்டப் பகுதிகள் மட்டுமே இருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஏழு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மணலியில் உள்ளன.
மற்றொன்று அண்ணா நகரில் உள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் மாநகராட்சி அத்தியாவசியப் பொருள்களை வழங்கி வருகிறது .