தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை கருத்து! மன்சூர் அலிகானுக்கு சம்மன்! நேரில் ஆஜராக உத்தரவு!

Mansoor Ali Khan: த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக மன்சூர் அலிகான் மீது ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில் நாளை (நவ. 23) நேரில் ஆஜராகும் படி போலீசார் சம்மன் வழங்கி உள்ளனர்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2023, 3:25 PM IST

Mansoor Ali Khan
நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மன்சூர் அலிகானுக்கு சம்மன்

சென்னை: தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி வில்லனாக நடித்து வருபவர் மன்சூர் அலிகான். இவர் சமீபத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் இருதயராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "முன்பெல்லாம் திரைப்படங்களில் நடிகைகளை வில்லன் பாலியல் துன்புறுத்தல் செய்யும் காட்சிகள் அதிகம் இருக்கும். இப்போது அது குறைவாகிவிட்டது. அந்த வில்லன் காட்சிகள் லியோ திரைப்படத்தில் த்ரிஷாவுடன் இருக்கும் என்று விரும்பினேன். ஆனால் அப்படி எதுவும் இல்லை" என்றார்.

இவரது இந்த பேச்சு சர்சையை கிளப்பியது. இது குறித்து த்ரிஷா தனது எக்ஸ் தளத்தில், "மன்சூர் அலிகான் தன்னைப் பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசும் வீடியோ ஒன்றைப் பார்த்தேன். இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். பாலியல் ரீதியாகவும், ஆணாதிக்க மனநிலையும், பெண்களை அவமரியாதை செய்யும் விதமாகவும், பாலின வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் பேசும் வீடியோ மோசமாக இருக்கிறது.

மேலும், அவர் என்னுடன் திரையில் நடிக்க விரும்பலாம். ஆனால் நான் இதுவரை இது போன்ற ஒரு நபருடன் நடிக்கவில்லை என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு மேலும் எனது திரை வாழ்கையில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கின்றேன். இவர்களை போன்றவர்களால் தான் ஒட்டுமொத்த மனித குலத்திற்கு அவப்பெயர்" என பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால், தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து ஐபிசி பிரிவு 509(பி) என்ற சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தது. மேலும், மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்தது.

இந்நிலையில் மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மன்சூர் அலிகான் மீது 354a, (பெண்களை தரைக் குறைவாக பேசுதல்), 309 (தற்கொலைக்கு தூண்டுதல்) உள்ளிட்ட இரண்டு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தவதாக கூறப்பட்டது.

இதற்காக, சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தனலட்சுமி மற்றும் பெண் போலீசார் இணைந்து நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள மன்சூர் அலிகான் இல்லத்திற்கு சம்மன் வழங்குவதற்காக நேரில் சென்று உள்ளனர். அப்போது மன்சூர் அலிகான் வீட்டில் இல்லாததால் அவரது மனைவியிடம் சம்மன் வழங்கி உள்ளனர்.

மேலும், அந்த சம்மனில் நாளை (நவ. 23) ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:கோவையில் இஸ்லாமிய பள்ளி மாணவியை ஆசிரியர் துன்புறுத்திய புகார்; கல்வித்துறை மற்றும் காவல்துறை அதிரடி விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details