சென்னை சாஸ்திரிநகர் 7ஆவது லேன் பகுதியில் வசிப்பவர் கன்னியம்மா. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மகள் பானு (28) என்பவருக்கு விமல்ராஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. பானுவுக்கும் அவரது கணவர் விமல்ராஜுக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த ஒரு ஆண்டாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் பானுக்கு, ஜெகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பின்னர் பானு தனது பெண் குழந்தையுடன் ஜெகன் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று (செப்.29) பானு தனது தாய் கன்னியம்மாவுக்கு போன் செய்து குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து, கன்னியம்மா நேரில் சென்று குழந்தையை பார்த்தபோது குழந்தை முகத்தில் சிராய்ப்பு காயம், முகத்தில் சூடு வைத்த காயம் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே கன்னியம்மா குழந்தையை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அங்கு குழந்தையை பார்த்த மருத்துவர்கள் உடனே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த சாஸ்திரி நகர் காவல் துறையினர், இதுகுறித்து கன்னியம்மாவிடம் விசாரணை நடத்தியதில், மகள் பானு தனது இரண்டாவது கணவர் ஜெகனுடன் சேர்ந்து குடிபோதையில் முதல் கணவருக்கு பிறந்த குழந்தையை அடித்து, சிகரெட்டால் சூடுவைத்து துன்புறுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து பானு மற்றும் அவரது இரண்டாவது கணவர் ஜெகன் ஆகியோரை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:கஞ்சா சோதனையில் சிக்கிய ரூ.1.75 கோடி - 2 பேரிடம் விசாரணை