சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் இயங்கி வரும் செந்தில் ஆண்டவர் பெட்ரோல் நிலையத்தில் கடந்த 8ஆம் தேதி இரவு வினோத் என்பவர் பெட்ரோல் நிரப்ப வந்தார். அப்போது, பெட்ரோல் நிரப்பும் மாற்றுத்திறனாளி சந்தோஷ், வினோத்தை அருகில் வருமாறு கூறியதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், சந்தோஷை வினோத் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அதை தட்டிக் கேட்ட பெண்ணையும் கடுமையான வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அங்கிருந்து புறப்பட்ட வினோத் மீண்டும் 10 அடியாள்களோடு வந்து முதல் தளத்தில் இருந்த பெட்ரோல் நிலைய மேலாளர் பூபதியை கடுமையாக தாக்கினர். அதை தடுக்க சென்ற மாற்றுத் திறனாளி ஊழியரையும் தாக்கி விட்டு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இது தொடர்பாக பெட்ரோல் நிலைய மேலாளர் பூபதி, புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் வினோத் உள்பட 10 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.