தமிழ்நாடு

tamil nadu

தர்ணாவால் டிஸ்மிஸ் - வங்கி பணியாளருக்கு மறுநியமனம் வழங்க உத்தரவு

By

Published : Oct 22, 2022, 6:07 PM IST

பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அலுவலகத்தில் 20 மணி நேரம் தர்ணாவில் ஈடுபட்டதாக பணி நீக்கம் செய்யப்பட்ட பாரத ஸ்டேட் வங்கி ஊழியருக்கு மறுநியமனம் வழங்கும்படி தொழிலாளர் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீக்கப்பட்ட வங்கி பணியாளருக்கு மீண்டும் மறுநியமனம்
நீக்கப்பட்ட வங்கி பணியாளருக்கு மீண்டும் மறுநியமனம்

சென்னை: பாரத ஸ்டேட் வங்கி மதுரை நிர்வாக அலுவலகத்தில் சிறப்பு உதவியாளராக பணியாற்றிய ராமமூர்த்தி உள்பட மூன்று ஊழியர்கள், மதுரையில் உள்ள பிற கிளைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமமூர்த்தி உள்ளிட்ட மூவரும், 2014ம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணி முதல் தர்ணாவில் ஈடுபட்டனர்.

கலைந்து செல்லும்படி அவர்களிடம் வங்கி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி வரை போராட்டத்தை தொடர்ந்ததால், மூவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து ராமமூர்த்தி தொடர்ந்த வழக்கை விசாரித்த, தொழிலாளர் நீதிமன்றம், அடுத்த கீழ்நிலை ஊதியத்துடன் அவரை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து பாரத ஸ்டேட் வங்கி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், இடமாற்றம் என்பது பணி விதி என்ற போதும், ராமமூர்த்தி உள்பட மூவரும் வங்கி பணி நேரம் முடிந்த பின் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தர்ணாவில் ஈடுபட்டதால் வாடிக்கையாளர்களுக்கு எந்த சங்கடமும் ஏற்படவில்லை எனவும், அவர்கள் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், தர்ணாவில் ஈடுபட்ட அவர்களை பணி நீக்கம் செய்தது என்பது அதிகபட்ச தண்டனை எனக் குறிப்பிட்ட நீதிபதி, ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் பணி நீக்கம் செய்யும் முன் சம்பந்தப்பட்ட ஊழியரின் 25 ஆண்டு கால சேவையை கருத்தில் கொண்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

பின்னர், ராமமூர்த்திக்கு ஊதியத்தை குறைத்து மீண்டும் பணி நியமனம் வழங்கும்படி தொழிலாளர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்த நீதிபதி, பொது சேவையின் முக்கியத்துவத்தை உணரச் செய்ய அவரை மீண்டும் பணியிட மாற்றம் செய்வது குறித்து வங்கி நிர்வாகமே முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்த தாம்பரம்

ABOUT THE AUTHOR

...view details