தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரும்பாக்கம் கொள்ளை சம்பவம்... காவல் ஆய்வாளர் அமல்ராஜ் கைது! - arumbakkam theft incident

அரும்பாக்கம் கொள்ளை வழக்கில் கொள்ளையடித்த தங்கத்தை மறைத்து வைத்திருந்த குற்றத்திற்காக அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளதாக வடக்கு கூடுதல் ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார்.

அரும்பாக்கம் கொள்ளை சம்பவம்.., காவல் ஆய்வாளர் அமல்ராஜ் கைது..!
அரும்பாக்கம் கொள்ளை சம்பவம்.., காவல் ஆய்வாளர் அமல்ராஜ் கைது..!

By

Published : Aug 19, 2022, 10:56 PM IST

சென்னை: அரும்பாக்கத்தில் கடந்த 13ஆம் தேதி தனியார் நகைக்கடன் வங்கியில் 31.7 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் பணியாற்றிய முருகனே தனது கூட்டாளியுடன் இணைந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு முக்கிய கொள்ளையன் முருகன்,சூர்யா, சந்தோஷ், பாலாஜி, செந்தில்குமரன் ஆகிய 5 பேரைக் கைது செய்து நகைகளைப் பறிமுதல் செய்தனர்.

மேலும், கொள்ளையடிக்கப்பட்ட நகையை உருக்க கருவியை வாங்கிக்கொடுத்து உதவிய நகை வியாபாரி கோயம்புத்தூரைச் சேர்ந்த ஸ்ரீவத்சவா கைது செய்யப்பட்டு நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து, இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக சந்தோஷின் உறவினரான அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டில் இருந்து 6 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து கொள்ளையடித்த நகைகளை மறைத்து வைத்திருந்த காரணத்தினால் ஆய்வாளர் அமல்ராஜ் மற்றும் அவரது மனைவி மெர்ஸி இந்திராவிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், அரும்பாக்கம் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 31.7 கிலோ நகைகளை முழுவதுமாக மீட்டதற்காக வடக்கு கூடுதல் ஆணையர் அன்பு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, அரும்பாக்கம் கொள்ளை வழக்கில் கொள்ளையடிக்கப்பட்ட 31.7 கிலோ நகைகளை முழுவதுமாக மீட்டு, இவ்வழக்கில் தொடர்புடைய மொத்தம் 7 பேரைக் கைது செய்துள்ளதாக அவர் கூறினார். குறிப்பாக கொள்ளையடித்த 6.5 கிலோ நகைகளை கொள்ளையன் சந்தோஷ், அவரது உறவினரான அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டில் மறைத்து வைத்திருப்பது தெரியவந்ததால் அவற்றைப் பறிமுதல் செய்து, காவல் ஆய்வாளர் அமல்ராஜை கைது செய்துள்ளதாக அவர் கூறினார்.

அரும்பாக்கம் கொள்ளை சம்பவம்.., காவல் ஆய்வாளர் அமல்ராஜ் கைது..!

கொள்ளையடிப்பதற்கு முன்பு, காவல் ஆய்வாளரின் தொடர்பு இல்லை எனவும்; கொள்ளையடித்த பிறகு நகைகளை மறைத்து வைக்க ஆய்வாளர் உதவி இருப்பது தெரியவந்த காரணத்தினால், காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

கொள்ளையன் சந்தோஷ் தொடர்பு கொண்ட செல்போன் எண்களை வைத்து, ஆய்வு மேற்கொண்டபோது அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்ததாகவும், நகைகள் குறித்த தகவலை காவல் துறைக்கு தெரிவிக்காமல் மூன்று நாட்கள் மறைத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

காவல் ஆய்வாளரின் மனைவியும் கொள்ளையனின் மனைவியும் உறவினர் என்பதால், இவ்வழக்கில் தொடர்புள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். மேலும், பேசிய அவர், கொள்ளையடித்த நகைகளை உருக்குவதற்காக மிஷின் வாங்கி நகைகளை உருக்கிய நகைவியாபாரி ஸ்ரீவத்சவா என்பவர் கைது செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

முகமூடி அணிந்து கொள்ளையில் ஈடுபட்டபோது சிசிடிவி காட்சிகள் அடிப்படையாக வைத்து கொள்ளையனை விரைவில் நெருங்க முடிந்ததாகவும், கொள்ளையர்கள் உறவினர்களைத் தொடர்பு கொள்ளாமல் இருந்ததினால் அவர்களை நெருங்குவது சற்று சவாலாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.

கொள்ளையில் ஈடுபட்ட முருகன் ஊழியர் என்பதால், வங்கியில் அலாரம் தொடர்பான விவகாரங்கள் குறித்து நன்கு அறிந்து வைத்து கொள்ளையில் ஈடுபட்டதாகவும், வங்கியில் அலாரம் குறித்து வங்கி அலுவலர்களிடம் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: சங்கரன்கோவிலில் கள்ளநோட்டை புழக்கத்தில்விட முயன்ற 2 பேர் கைது.. ரூ.3 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details