சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் துரைராஜ், தச்சு வேலை செய்து வரும் இவருக்கு, 17 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார். துரைராஜின் மனைவி கடந்து 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் சிறுமியை துரைராஜ் தனியாக வளர்த்துள்ளார். ஆனால் கடந்த சில மாதங்களாக சிறுமியை பார்த்துக் கொள்ள முடியாத சூழ்நிலையில் துரைராஜ், சென்னை பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள தனியார் காப்பகத்தில் சேர்த்துள்ளார். இதனிடையே சிறுமி 12ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெறாத நிலையில் இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூகவலைதளத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து வீடியோ வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
அண்மையில் ஆண் போல நடை, உடையுடன் காட்சியளிக்கும் பெண் தோழியுடன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியினால் பிரபலம் அடைந்தார். இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக சிறுமிக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டு மிகவும் அவதிப்பட்டு உள்ளார். தனியார் காப்பகம் நடத்தி வரும் கார்த்திகேயன் என்பவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்துள்ளார். ஆனால் சிறுமி கடந்த 30ஆம் தேதி தனது செல்போன் உள்ளிட்ட உடமைகளை மருத்துவமனையில் வைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து பதட்டம் அடைந்த காப்பக உரிமையாளர் கார்த்திகேயன் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் பெண் காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். சிறுமி விட்டு சென்ற செல்போனை ஆய்வு செய்த காவல் ஆய்வாளர், சிறுமி அதிகளவில் இன்ஸ்டாகிராம் நண்பர்களுடன் நேரம் செலவழிப்பதை கண்டுபிடித்து அவரது நட்பு பட்டியலில் உள்ள ஒவ்வொரு நபர்களையும் தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொண்டார்.