தமிழ்நாடு

tamil nadu

பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகள்

தமிழ்நாட்டில் நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

By

Published : Oct 30, 2021, 5:54 PM IST

Published : Oct 30, 2021, 5:54 PM IST

Updated : Nov 1, 2021, 8:24 AM IST

schools
schools

சென்னை: தமிழ்நாட்டில் கோவிட் - 19 பெருந்தொற்றுக் காரணமாக மார்ச் 2020 முதல் பள்ளிகள் மூடப்பட்டன. 9-12 ஆம் வகுப்புகளுக்கு 01.09.2021 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 1-8 ஆம் வகுப்புகளுக்கு 01.11.2021 முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.

நீண்ட காலம் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையிலும் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகள் தடை பெறாமல் நடைபெற மாணவர்களுக்கு உரிய நேரத்தில் புத்தகங்கள் வழங்குதல், கல்வி தொலைக்காட்சியின் மூலம் அனைத்து வகுப்புகளுக்குக் காணொலிப் பாடங்களை வழங்குதல், வானொலி நிலையங்கள் வானொலிப் பாடங்களை ஒலிபரப்புதல் போன்ற மூலமாக பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன.

இவை தவிர தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களின் தனிப்பட்ட முயற்சிகளாக புலனம் ( Whats App ) மற்றும் வலையொலி ( Pod cast ) மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன.

மாணவர்களிடம் கற்றல் இழப்பு

ஆசிரிய - மாணவ நேரடி வகுப்பறை கற்றல் கற்பித்தல் நிகழ்வு பள்ளிச்சூழலில் நிகழாத காரணத்தாலும், இறுதி ஆண்டு தேர்வுகளின்றி மாணவர்கள் அடுத்த வகுப்பிற்குத் தேர்ச்சி வழங்கப்பட்டதாலும் மாணவர்களிடம் கற்றல் இழப்பு மற்றும் கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது.

2020 2021 ஆம் கல்வி ஆண்டில் 1 ஆம் வகுப்பு சேர்க்கப்பட்ட மாணவர்கள் 2021 - 2022 ஆம் கல்வியாண்டில் 2 ஆம் வகுப்பு பாடங்களைக் கற்பதற்கான திறன்களை முழுமையாகப் பெறாமல் 2 ஆம் வகுப்பிற்கு வருகை தரவுள்ளனர்.

இதேபோல் 2020- 2021 ஆம் கல்வி ஆண்டில் 2 ஆம் வகுப்பில் இருந்த மாணவர்கள் 3 ஆம் வகுப்பு பாடங்களைக் கற்பதற்கான திறன்களை முழுமையாகப் பெறாமல் 3 ஆம் வகுப்பிற்கு வருகை தரவுள்ளனர்.

மனமகிழ்ச்சி செயல்பாடு

2021-2022 ஆம் கல்வி ஆண்டில் 1 ஆம் வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் 5 மாதம் கழித்து முதல் முறையாகப் பள்ளிக்கு வருகை தரவுள்ளனர்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதல், புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் மற்றும் முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டம் ஆகியவை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளன.

மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதல், மாணவர்கள் 17 மாத இடைவெளிக்குப் பிறகு பள்ளிக்கு வருகை தருவதால் முதல் 10-15 நாள்களுக்கு கதை, பாடல் , விளையாட்டு, வரைதல், வண்ணம் தீட்டுதல், அனுபவப் பகிர்வு, கலந்துரையாடல் போன்ற மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதலைப் பின்பற்றி மனமகிழ்ச்சி செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கு பின்னரே புத்தாக்கப் பயிற்சிக்கான செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள்

மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பு மற்றும் கற்றல் இடைவெளியைக் கருத்தில் கொண்டு 2-8ஆம் வகுப்புகள் வரை புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

8 ஆம் வகுப்பிற்கான புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 6 ஆம் வகுப்பு வரையிலான அடிப்படைப் பாடக் கருத்துகள் மற்றும் 7 ஆம் வகுப்பிற்கான முக்கியப் பாடக்கருத்துக்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ளது.

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் கீழ்க்காணும் முறைகளில் செயல்படுத்த வேண்டும். 1 ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் முறையாக பள்ளிக்கு வருகை தரவுள்ளதால் மனமகிழ்ச்சி வழிகாட்டுதலைப் பின்பற்றி குழந்தைகளின் மனவெழுச்சியை ஆற்றுப்படுத்தும் வகையில் செயல்பாடுகள் அமைய வேண்டும்.

முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டம்

இதனை முடித்த பின்னர் முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 2-5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்காள வழிகாட்டுதலைப் பின்பற்றி முதல் 10,15 நாள்களுக்குள் மனமகிழ்ச்சி செயல்பாடுகளை முடித்தபின் , பயிற்சிக் கட்டகங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் 45-50 நாள்களுக்கு நடைமுறைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் மாணவர்களுடைய கற்றல் அடைவு நிலைக்கேற்றாற்போல் காலஅளவை நீட்டிப்பதையும் முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தை செயல்படுத்துவதையும் ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம்.

6 - 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதலைப் பின்பற்றி முதல் 10 - 15 நாள்களுக்குள் மனமகிழ்ச்சி செயல்பாடுகளை முடித்தபின், புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஆனால், மாணவர்கள் வகுப்பிற்கேற்ற சுற்றல் அடைவு நிலையில் இருந்தால் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தை மீள்பார்வைக்காக பயன்படுத்தி கொள்ளலாம். மீள்பார்வைக்கான காலஅளவை பயன்படுத்திக் பள்ளி அளவிலேயே மாணவர்கள் நிலைக்கேற்ப முடிவு செய்து அதன்பின் கொள்ளலாம் .

ஆசிரியர்களுக்கு நல்ல புரிதலை ஏற்படுத்துதல்

முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் மேற்காண் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பள்ளி திறப்பதற்கு முன்பே இச்செய்திகள் அனைத்து ஆசிரியர்களை சென்றடைந்து அவர்களுக்கு நல்ல புரிதலை ஏற்படுத்துதல் வேண்டும்.

மேலும் மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதல் , புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் மற்றும் முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டம் ஆகியவற்றின் மென் நகல்களை தொடக்கக்கல்வி இயக்கத்தின் ஆளுகைக்கு உட்பட்ட தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தை செயல்படுத்தும் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கும் பொருட்டு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

இதையும் படிங்க: பள்ளி வளாகங்களில் தத்ரூப ஓவியங்கள் - 'அடடே' ஆரம்பப்பள்ளி!

Last Updated : Nov 1, 2021, 8:24 AM IST

ABOUT THE AUTHOR

...view details