இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் 27ம் தேதி முதல் நடைபெற உள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதிப்பீட்டு முகாம்களில் ஆசிரியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் ஒரு அறையில் ஒரு முதன்மை தேர்வாளர் (முதுநிலை ஆசிரியர்கள்), ஒரு கூர்ந்தாய்வாளர், ஆறு உதவி தேர்வர்கள் என 8 நபர்கள் மட்டுமே அமர்ந்து விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
சமூக இடைவெளி பின்பற்றப்படும் பொழுது முதன்மை கல்வி அலுவலர்களால் கூடுதலாக தேவைப்படும் அறைகள் கணக்கிடப்பட்டு மதிப்பீட்டு பணியினை மேற்கொள்ள கூடுதலாக தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் மதிப்பீட்டு முகாம் பணிகளை மேற்கொள்ளலாம். கூடுதலாக வேறு பள்ளிகளில் மதிப்பீட்டு பணிகள் நடைபெறும்போது அந்த இடங்களில் பணி நடைபெறும் நாட்களில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். ஏற்கனவே தெரிந்து எடுக்கப்பட்ட மதிப்பீட்டு மையங்கள் முதன்மை மதிப்பீடு மையமாகவும், தற்போது கூடுதலாக பரிந்துரை செய்யப்பட்டுள்ள பள்ளிகள் துணை மதிப்பீட்டு மையங்களாக செயல்பட வேண்டும்.