அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 13 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 465க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இணைப்புக் கல்லூரிகளாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட முன்வடிவு இன்று (செப்டம்பர் 16) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பெற்ற கல்லூரிகளை கண்காணித்தல் மற்றும் நிர்வகிக்கும் பணிகளில் தொய்வினை தவிர்க்கவும் கற்றல் தரத்தை உயர்த்தும் வகையில் ஆராய்ச்சியில் கவனம் செலுத்திடவும் அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
திமுக ஆட்சியில் ஆறாக பல்கலைக்கழகம் பிரிப்பு!
ஆனால், அண்ணா பல்கலைக்கழகம் பிரிக்கப்படுவது இது முதல் முறையல்ல கடந்த 2007ஆம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சியில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், திருச்சி, மதுரை, நெல்லை, கோவை என ஆறாக பிரிக்கப்பட்டு செயல்பட தொடங்கியது. கலந்தாய்விற்காக மாணவர்கள் சென்னை வருவதை தவிர்க்கவும் நிர்வாக காரணங்களுக்காகவும் ஆறாக அண்ணா பல்கலைக்கழகம் பிரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதிமுக ஆட்சியில் பிரிப்பது தேவையற்றது
இதனைத்தொடர்ந்து கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அண்ணா பல்கலைக்கழகத்தை ஆறாக பிரித்த நடவடிக்கை தேவையற்றது என்று கருதியதுடன் 2012ஆம் ஆண்டு ஆறு பல்கலைக்கழக வளாகங்கள் மீண்டும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் ஒன்றாக இணைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு சீர்மிகு பல்கலைக்கழகம் என்ற சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக அறிவித்தது.