தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 4, 2020, 11:51 AM IST

ETV Bharat / state

பாடத்திட்டத்தை வெளியிடும் முன் ஆசிரியர்களிடமும் கருத்து கேட்கக் கோரிக்கை!

சென்னை: தமிழ்நாடு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான குறைக்கப்பட்ட மாநில பாடத்திட்டத்தினை அரசு வெளியிடும் முன்னர் ஆசிரியர்களிடமும் கருத்து கேட்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேட்ரிக் ரெய்மெண்ட்
பேட்ரிக் ரெய்மெண்ட்

கரோனா காரணமாக மார்ச் மாதம் 25ஆம் தேதி மூடப்பட்ட பள்ளிகள் தற்போதுவரை திறக்கும் தேதி உறுதியாக அறிவிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் நவம்பர் 16ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும், ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான வகுப்புகள் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

பள்ளி கல்லூரிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே பள்ளிகள் திறக்கும் தேதி வடகிழக்கு பருவமழை மற்றும் கரோனா வைரஸ் இரண்டாவது அலை வருமா என்ற அச்சத்தால் தள்ளிப்போகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு ஒவ்வொரு ஆண்டும் பாடத்திட்டத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட வேலைநாள்கள் ஒதுக்கப்படும். ஆனால் நடப்பாண்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் பள்ளியின் வேலை நாட்கள் 40 விழுக்காட்டிற்கு மேல் முடிவடைந்துள்ளது. இதனால் ஆசிரியர்கள் பாடங்களை முழுவதுமாக நடத்த முடியாது.

பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தினை குறைப்பதற்கு ஏற்கனவே வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு பாடத்திட்டங்களை குறைந்துள்ளது. மேலும் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் கல்வி தொலைக்காட்சியில் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகின்றன.எனவே குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தினை உடனடியாக வெளியிட வேண்டும் என ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மெண்ட், ”நவம்பர் 16ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதற்கு முன்பாக பெற்றோர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகளை அழைத்து பாதுகாப்பு வழிமுறைகளை உறுதி செய்ய வேண்டும்.

மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது காலை நேரத்தில் பள்ளி நடைபெறுகிறதா? அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் பள்ளி நடைபெறுகிறதா? போன்றவற்றை அரசு தெளிவாக வெளியிட வேண்டும். அதேநேரத்தில் தற்போது தனியார் பள்ளிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. எனவே அரசு வெளியிடும் வழிமுறைகளை அனைவரும் சரியாக கடைப்பிடிக்கின்றனரா? என்பதை கண்காணிக்க வேண்டும்.

பள்ளிக்கு வரக்கூடிய மாணவர்கள் பொது போக்குவரத்தில் வருகிறார்களா? அல்லது தனியாக வருகிறார்களா? என்பதையும் கண்காணிக்க வேண்டும். மேலும் அவர்கள் பள்ளிக்கு வந்த பின்னர் வீட்டிற்கு எவ்வாறு செல்கிறார்கள் என்பதையும் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே இருந்த நடைமுறையில் வழிபாட்டு கூட்டங்கள், விளையாட்டு நேரங்கள், ஆய்வகங்களில் மாணவர்கள் நெருக்கமாக கூடுவார்கள் அதுபோன்ற நேரங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் அரசு தெளிவாக வரையறை செய்ய வேண்டும்.

அதேபோல் ஒவ்வொரு முறையும் மாணவர்கள் கழிப்பறையை பயன்படுத்தும் போதும் சுத்தம் செய்ய வேண்டும். இது போன்றவற்றை மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் செயல்படுத்துவது எளிதானது. ஆனால் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பள்ளியில் செயல்படுத்தும்போது சிரமமாக இருக்கும்.வகுப்பறை 20 அடி அகலம் 20 அடி நீளத்தில் மூடப்பட்ட நிலையில் இருக்கும்.

முதலில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டால் மாணவர்கள் அவர்களுக்குரிய முகக் கவசங்களை பயன்படுத்தி தங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வார்கள்.

உள்ளூர் நிர்வாகத்துடன் தொடர்புகொண்டு நாள்தோறும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். மாவட்ட அளவில் குழு அமைத்து கண்காணிப்புடன், பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் தொடர்பு கொள்வதற்கு உதவிகளையும் அறிவிக்கவேண்டும். எனவே பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கவுன்சிலிங் செய்த பின்னர் பள்ளிகளைத் திறக்க வேண்டும்.

உள்ளூர் நிர்வாகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் பள்ளிகளை திறந்து செயல்படுத்துவது இயலாது. அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பரிசோதனை செய்ய தெர்மல் ஸ்கேனர் தேவை. தெர்மல் ஸ்கேனர் மூலம் மாணவர்கள் பரிசோதனை செய்யப்பட்டு முறையாக பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும். மாணவரின் உடல் நிலையில் வேறுபாடுகள் இருந்தால் பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு நவம்பர் 16ஆம் தேதி முதல் பள்ளிகளைத் தொடக்கலாம் என முடிவு செய்துள்ளது. பாடத்திட்டத்தினை குறைப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஆகஸ்ட் மாதம் முதலமைச்சரிடம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் தற்போது 3 மாதங்கள் கடந்துவிட்டன. எனவே அதனை மீண்டும் மறு ஆய்வு செய்து ஒரு தெளிவான அரசாணையை அரசு வெளியிடும் என எதிர்பார்க்கிறோம்.

பேட்ரிக் ரெய்மெண்ட் பேசிய காணொலி

இந்தப் பாடங்கள் தெரிந்தால்தான் அதனை வைத்துக்கொண்டு ஆசிரியர்கள் பாடங்களை நடத்த முடியும் தனியார் பள்ளியில் எல்லா பாடங்களையும் நடத்திக்கொண்டு இருக்கின்றனர். கல்வி தொலைக்காட்சி முக்கியமான பகுதிகள் நடத்தப்பட்ட கொண்டிருக்கின்றன. இருந்தாலும் ஆசிரியர்களிடம் கருத்து கேட்டு பாடத்திட்டத்தை இறுதி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோம்”என்றார்.
இதையும் படிங்க:1 முதல் 10ஆம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் குறைப்பு

ABOUT THE AUTHOR

...view details