சென்னையை சேர்ந்த அப்போலோ மருத்துவமனை மற்றும் சேலத்தைச் சேர்ந்த கோகுலம் மருத்துவமனை ஆகியவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் மருத்துவ உபகரணங்களுக்கு சுங்க வரி செலுத்துவதில் இருந்து மத்திய அரசு விலக்களித்திருந்தது.
1985ஆம் ஆண்டிலிருந்து 1993ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை சுங்க வரி விலக்கு அமலில் இருந்த நிலையில், வரி விலக்குக்கான விதிகளைப் பின்பற்றாததால் இனி இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு சுங்க வரி செலுத்த வேண்டுமென மத்திய சுகாதார பணிகளுக்கான இயக்குநர் தெரிவித்திருந்தார்.
இதனை எதிர்த்து அப்போலோ மற்றும் கோகுலம் மருத்துவமனைகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சுங்க வரி விலக்கு பெறும் மருத்துவமனைகள் இறக்குமதி செய்யப்படும் உபகரணங்கள் மூலம் ஏழ்மையில் இருக்கும் 40% சதவீத உள்நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிப்பதோடு 10 சதவீத படுக்கையை இலவச சிகிச்சைக்கு ஒதுக்க வேண்டுமென விதிமுறைகள் உள்ளதாக கூறினார்.