தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மோக்கா புயல் : தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! - தமிழ்நாட்டில் மழை

மோக்கா புயல் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TODAY
மழை

By

Published : May 13, 2023, 3:53 PM IST

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று(மே.13) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய மிகத் தீவிர 'மோக்கா' புயலானது நேற்று(மே.12) இரவு 11.30 மணி அளவில் அதி தீவிர புயலாக வலுப்பெற்று வடகிழக்குத் திசையில் நகர்ந்து, இன்று காலை 8.30 மணி அளவில் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 560 கிலோ மீட்டர் வடக்கு - வடமேற்கே நிலை கொண்டுள்ளது.

இது வடக்கு-வடகிழக்குத் திசையில் நகர்ந்து நாளை நண்பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை மிகத்தீவிர புயலாக கடக்கக்கூடும். அந்த சமயத்தில் காற்றின் வேகம் 150 முதல் 160 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 175 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

புயல் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 15ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 16, 17 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 17ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயரக்கூடும். வரும் 14, 15, 16 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.

தென்மேற்கு வங்கக்கடல், தமிழக - இலங்கை கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளுக்கு அடுத்த இரண்டு நாட்கள் மீனவர்கள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ் கடலிலுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதிதீவிரமாகும் 'மோக்கா புயல்' - வங்கக்கடலில் மிகத்தீவிரப் புயலாக வலுப்பெறுகிறது

ABOUT THE AUTHOR

...view details