சென்னை:சட்டப்பேரவையில் இன்று (மே 5) போக்குவரத்து துறை மற்றும் சுற்றுலாத்துறை மற்றும் கலை, பண்பாடுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டார். அவை பின்வருமாறு,
- 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணமில்லா பயணம் செயல்படுத்தப்படும். (தற்போது 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரை கட்டணத்தில் பயணச் சீட்டு வழங்கப்படுகிறது)
- தானியங்கி பயணச் சீட்டு வழங்கும் முறை பண பரிவர்த்தனையற்ற பயணச் சீட்டு முறையை ரூபாய் 70 கோடி செலவில் KfW ஜெர்மனி மேம்பாட்டு வங்கியின் நிதி உதவியுடன் அறிமுகப்படுத்தப்படும்.
- சென்னை, திருச்சி மற்றும் விழுப்புரத்தில் உள்ள அரசு தானியங்கி பணிமனைகளை நவீனமயமாக்கல் மற்றும் தரம் உயர்த்தப்படும். இதற்காக ரூபாய் 70.73 லட்சம் செலவிடப்படும்.
- அரசு தானியங்கி பணிமனைகள் இல்லாத இடங்களில் அரசுத்துறை வாகனங்களை ஆய்வு செய்வதற்காகவும், பராமரிப்பதற்காகவும் அரசு நடமாடும் பணிமனைகள் ரூபாய் 1.36 கோடி செலவில் உருவாக்கப்படும்.
- அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் ஒருங்கிணைந்த பயணிகள் குறைதீர்க்கும் உதவி மையம்அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் ஒருங்கிணைந்த பயணிகள் குறைதீர்க்கும் உதவி மையம் அமைக்கப்படும்.
- பேருந்து முனையங்களில் இணையவழி பயணியர் தகவல் ஏற்பாட்டு முறை செயல்படுத்தப்படும்.
- தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் பயணச்சுமைப் பெட்டிகள் வாடகைக்கு விடப்படும்.
- இணையவழிப் பயணச்சீட்டு முன்பதிவு வாயிலாக இருவழி பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 விழுக்காடு கட்டணச் சலுகை வழங்கப்படும்.
- திருச்சி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரத்தில் அதி நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஓட்டுநர் பயிற்சி மையம் அமைக்கப்படும்.
- பொதுமக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரடியாக வராமலேயே ஓட்டுநர் உரிமத்தில் வாகன வகையினை ஒப்புவித்து செய்தல், போக்குவரத்து அல்லாத வாகன உரிமை மாற்றத்தினை தெரிவித்தல் மற்றும் பதிவுச் சான்றில் தவணை கொள்முதல் விவரத்தினை மேற்குறிப்பு செய்தல் ஆகிய சேவைகள் கணினி வழியாக பெறுப்படும்.
- பள்ளி வாகனங்களுக்கு முன்புறம் மற்றும் பின்புறம் கேமராவுடன் சென்சார் கருவி பொருத்தப்படும்.
- ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் (பகுதி அலுவலகம்) உருவாக்கப்படும்.
- திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் (பகுதி அலுவலகம்) உருவாக்கப்படும்.
- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் (பகுதி அலுவலகம்) வட்டார போக்குவரத்து அலுவலகமாக தரம் உயர்த்தப்படும்.