கரோனா நிவாரணமாக 15 கிலோ அரிசி, பருப்பு, சர்க்கரை, ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆனால், தற்போது 144 தடை உத்தரவு உள்ளதால் நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் பெண்கள் வெகு தொலைவிலிருந்து கடைகளுக்கு வருவதில் சிரமம் உள்ளது.
இதனால் பல பெண்களுக்கு மருத்துவ விடுப்பு அளித்து வீட்டிற்குச் செல்லுமாறு துறை அலுவலர்கள் கூறியுள்ளதாகத் தகவல் வெளிவருகின்றன. இந்நிலையில், அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தரவேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) தலைவர். கிருஷ்ண மூர்த்தி கூறுகையில், "கரோனா அபாயத்திலிருந்து மக்களை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். தற்போது உள்ள சூழ்நிலையில் அரசு உணவு, சுகாதாரம், குடிநீர் இவைகளை மக்களுக்கு கொண்டு சேர்ப்பது என்பது அத்தியாவசியத் தேவையாக அமைந்துள்ளது.
அன்றாடம் தினக்கூலிக்கு சென்று அந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்தக்கூடிய ஏராளமான முறைசாரா தொழிலாளர்கள் பெரிதும் இக்காலத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய பணியில் ஈடுபட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் அனுபவித்து வரும் இன்னல்களை சொல்லி மாளாது.
இதுபோன்ற காலத்தில் அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரணங்களை மேற்கொள்ள வேண்டும். ஆனால் தற்போதுள்ள மெத்தனப் போக்கு என்பது மக்களை பசி பட்டினியில் கொண்டு சேர்த்து விடுமோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.