சென்னை: தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பல்வேறு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் உலகிலேயே முதன்முறையாக உண்மையான சிலைகளைக் கொண்டு விர்ச்சுவல் மியூசியத்தை உருவாக்கியது தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு.
இந்த நிலையில், தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி புதிய முயற்சியாக, சிறப்பாக வேலை செய்த காவல் அதிகாரிகளுக்கு டிஜிட்டல் முறையில் அங்கீகாரத்தையும் பரிசுகளையும் வழங்கியுள்ளார்.
கடந்த நவம்பர் 18ஆம் தேதி திருவான்மியூரில் ரத்னேஷ் பாந்தியா என்பவரின் வீட்டில் 15 சிலைகளை மீட்ட டிஎஸ்பி முத்துராஜ், டிஎஸ்பி மோகன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம், காவலர் ரீகன் லட்சுமி காந்த் ஆகியோருக்கு சிறந்த முறையில் பணியாற்றியதற்காக, NFT (non fungible token ) எனப்படும் டிஜிட்டல் வெகுமதியை வழங்கியுள்ளார்.
உலகிலேயே இரண்டாவதாக இந்த முறையில் பரிசு வழங்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் துபாய் நாட்டில் முதன்முறையாக காவலர்களுக்கு இது போன்று வெகுமதி வழங்கப்பட்டது. அதேபோல் உலகிலேயே முதல் முறையாக, சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு SBT ( soul bound token) டிஜிட்டல் மெடல் வழங்கப்பட்டுள்ளது.