சென்னை: திருச்சியில் கடந்த மாதம் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடிகள் துரைசாமி, சோமசுந்தரம் ஆகிய இருவர் தப்பிச்செல்ல முயன்ற போது போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்டனர். தூத்துக்குடியில் வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயபிரகாஷ், தஞ்சாவூர் நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வன் கொலை வழக்கில் பிரவீன் ஆகியோர் போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்டனர்.
கோவையில் ரவுடி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கெளதம், ஜோஸ்வா ஆகியோர் காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதாக, அவர்களை காலில் சுட்டு காவவல்துறை பிடித்தனர். அதேபோல் மதுரை சத்தியபாண்டி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராஜா தப்ப முயற்சித்த போது துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 9 ரவுடிகள் காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றதாக சுடப்பட்டதாக கூறப்படுகிறது.
காவல் துறையினர் தற்காப்புக்காக இந்த துப்பாக்கி சூடுகள் நடத்தியதாக கூறினாலும், இவை போலி எண்கவுண்டர் என பரவலாக கூறப்பட்டு வருகிறது. இந்த சம்பவங்கள் தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த சம்பவங்கள் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி, ஆறு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, மனித உரிமைகள் ஆணைய புலன் விசாரணைப் பிரிவு ஐஜிக்கு மனித உரிமைகள் ஆணைய தலைவர் நீதிபதி பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.