தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரேலா மருத்துவமனையுடன் 5 அரசு மருத்துவமனைகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் - ரேலா மருத்துவமனையுடன் 5 அரசு மருத்துவமனைகள் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை உள்பட ஐந்து அரசு மருத்துவமனைகளுக்கும் ரேலா மருத்துவமனைக்கும் இடையே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஒப்பந்தம்
ஒப்பந்தம்

By

Published : Mar 2, 2022, 8:20 PM IST

சென்னை:எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தில், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை, மதுரை அரசு மருத்துவமனை என ஐந்து அரசு மருத்துவமனைகளுக்கும் சென்னை ரேலா மருத்துவமனைக்கும் இடையே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் முன்னிலையில் கையெழுத்தானது.

இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், "இந்த ஒப்பந்தத்தின்படி ரேலா மருத்துவர்கள் குழு அரசு மருத்துவமனைக்குச்சென்று, மாற்று அறுவை சிகிச்சையை செய்வார்கள். இந்த அறுவை சிகிச்சையின்போது அரசு மருத்துவர்கள் உடனிருந்து பயிற்சி பெற்றுக்கொள்வர். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் நோயாளிகள் மட்டும் ரேலா மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுவார்கள்.

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம்

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.19 லட்சமும், எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.3 லட்சமும் செலவிடப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் ஸ்டான்லி மருத்துவமனையில் 2009ஆம் ஆண்டு முதல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதுவரை முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 1043 நோயாளிகளுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ரூ.225 கோடியில் செய்யப்பட்டுள்ளது.

தலசிமியா, ரத்தப் புற்றுநோய், ரத்த சோகை ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இதுவரை 1493 பேருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை ரூ.149 கோடியில் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 314 பேர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர்" எனத் தெரிவித்தார்.

அரசு ரூ.19 லட்சம் வரை செலவை ஏற்கிறது

இந்நிகழ்வில் பேசிய ரேலா மருத்துவமனையின் தலைவர் முகமது ரேலா, " உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. பல மாநிலங்கள் தமிழ்நாட்டில் உள்ள சிகிச்சை முறையைப் பின்பற்றுகின்றன. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.19 லட்சம் வரை ஆகும் செலவை அரசு ஏற்கிறது.

இதனால் தமிழ்நாட்டில் உரிய சிகிச்சை மேற்கொள்ள பணமில்லாமல் சிகிச்சையின்றி உயிரிழக்கும் எண்ணிக்கை இல்லை. மற்ற மாநிலங்களில் சிகிச்சைக்குப் பணம் இல்லாமல், சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் பலர் உயிரிழக்கின்றனர். இதன் மூலம் தமிழ்நாடு சுகாதாரத்துறை மக்களின் சிகிச்சைக்காக தொகை ஒதுக்குவதில் முன்னோடி மாநிலமாக உள்ளது" எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச்செயலாளர் ராதாகிருஷ்ணன், சிறப்பு அலுவலர் செந்தில்குமார், தமிழ்நாடு சுகாதாரத்திட்ட இயக்குநர் உமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: நகைக் கடன் தள்ளுபடி: அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் ஐ.பெரியசாமி

ABOUT THE AUTHOR

...view details