சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலைத் தயாரிப்புகள் விளம்பரம் செய்தலை தடை செய்தல், முறைப்படுத்துதல் சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.
சட்ட மசோதாவில் இருப்பது என்ன?:சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலைத் தயாரிப்புகள் (விளம்பரம் செய்தலை தடை செய்தல் மற்றும் வணிகம், வாணிபம், உற்பத்தி, வழங்குதல் மற்றும் விநியோகம் செய்தலை முறைப்படுத்துதல்) சட்டம் 2003-ஐ, தமிழ்நாட்டிற்கு ஏற்ற வகையில் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த திருத்தம் மூலம் புகைப்பிடித்தல் மேலும் ஒழுங்குபடுத்தப்படுகிறது.
சென்னையில் புகைக்குழல் கூடங்கள் (ஹூக்கா பார்) அதிக அளவில் திடீரென பெருகி உடல் நலனுக்கு கொடிய சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. பல உணவகங்களும், புகைப்பிடிக்கும் பகுதிகளில் இந்த சேவையை வழங்கி, புகைப்பிடிப்பதை அனுமதித்து வருகின்றன. தற்போது தமிழ்நாட்டில் புகைக்குழல் கூடத்தை ஒழுங்குபடுத்தும் சட்டம் எதுவும் இல்லை.