தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 1, 2019, 3:22 PM IST

Updated : Sep 8, 2019, 12:00 PM IST

ETV Bharat / state

தெலங்கானாவை ஆளப்போகும் ‘தமிழ்’இசை!

குடும்பமே காங்கிரஸ் கட்சியில் மூழ்கியிருக்க ஒருவர் மட்டும் பாஜக கட்சியில் இணைந்தார். அரசியல் மீது அதீத ஆர்வம், ஆனால் தேர்தல் வெற்றிகளை சுவைக்கவில்லை. இருப்பினும் தனது விடாமுயற்சியால் ஒரு மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பை பெற்றுள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்.

Tamilisai Soundararajan

தமிழ்நாடு பாஜக தலைவராக கடந்த 2013ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்டவர் தமிழிசை சௌந்தரராஜன். தந்தை குமரி அனந்தன், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரில் ஒருவராக பதவி வகித்தவர். குடும்பம் காங்கிரஸ் கட்சியின் பக்கம் நிற்க, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் தமிழிசை.

மோடி - தமிழிசை

மருத்துவரான தமிழிசை அவரது மருத்துவ படிப்பை மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் தொடங்கினார். மருத்துவம் தொடர்பான உயர் படிப்பை கனடாவில் முடித்தார். அரசியல் மீது அதீத ஆர்வம் கொண்ட தமிழிசை, 1999ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். தந்தை காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும், அவருக்கு விருப்பமான கட்சியைத் தேர்ந்தெடுத்தார். முதன்முதலில் 1999ஆம் ஆண்டு தென் சென்னை மாவட்ட மருத்துவ அணி செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பின், 2001ஆம் ஆண்டு மருத்துவ அணி பொதுச்செயலாளராக பதவி வகித்தார். 2005ஆம் ஆண்டு பாஜக மாநிலப் பொதுச் செயலாளர், 2010ஆம் ஆண்டு பாஜகவின் மாநில துணைத் தலைவராக பதவி வகித்து அடுத்தடுத்த நிலையை அடைந்தார். அதனைத் தொடர்ந்து, 2013ஆம் ஆண்டு தமிழ்நாடு பாஜக தலைவராக பொறுப்பேற்றார்.

அமித்ஷா-தமிழிசை

மருத்துவம் படித்து அரசியல் வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்தவர், இதுவரை அவர் போட்டியிட்ட எந்த தேர்தலிலும் வெற்றி பெற்றதில்லை. 2006, 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் 2009, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் ஆகிய நான்கு தேர்தல்களிலும் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இவர் போட்டியிட்ட நான்கு தேர்தல்களிலும் மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே தோற்றுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலிலும் தூத்துக்குடியில், திமுக கட்சி வேட்பாளர் கனிமொழிக்கு எதிராக போட்டியிட்டார். வெற்றி பெற்றுவிடுவோம் என்று எண்ணிக் கொண்டிருந்தவர், தோல்வியைச் சந்தித்தார். எனினும் விடாமுயற்சியுடன் அரசியலில் பயணித்து வருகிறார்.

கட்சி பணியின் போது

தமிழிசையை விமர்சிக்காத ஆள் இல்லை. இருப்பினும் அரசியல் மட்டுமல்லாமல் திரையுலகிலும் பெண்களுக்கு பிரச்னை என்றால் குரல் கொடுத்து வருகிறார், தமிழிசை. சின்மயியின் மீடூ விவகாரம் அதற்கான எடுத்துக்காட்டாகும். பலராலும் விமர்சனம் செய்யப்பட்டாலும் தனது பணியை செவ்வேனேச் செய்து வருகிறார்.

இந்தியாவின் வட மாநிலங்களில் மட்டும் அதிகம் பேசப்பட்டு வந்த பாஜக, தமிழ்நாட்டிலும் பேசப்பட்டதில் தமிழிசையின் பங்களிப்பு முக்கியமானது. மாவட்டந்தோறும் சென்று பரப்புரை மேற்கொண்டது, மக்களின் குறைகளை கேட்டறிந்தது, வறுமையில் இருப்பவர்களுக்கு மருத்துவ உதவி செய்தது என பாஜக வளர்ச்சிக்காக தன்னால் இயன்றதை செய்தார், தமிழிசை.

தமிழிசை சௌந்தரராஜன்

இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவராக பதவி வகித்து வந்த தமிழிசை, தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அரசியலில் அடுத்தடுத்த நிலைகளுக்கு சென்று கொண்டிருப்பவர், தற்போது ஒரு படி உயர்ந்து அண்டை மாநிலமான தெலங்கானாவின் ஆளுநர் பொறுப்பேற்கவுள்ளார்.

Last Updated : Sep 8, 2019, 12:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details